'ஜகா' வாங்கும் எம்எல்ஏக்கள்... தினகரனின் அரசியல் ஏணி சறுக்குகிறதா?
சசிகலா குடும்பத்தை பிடித்து பதவி வாங்கிவிட வேண்டும் என்று கருதிய அதிமுகவினர், இன்று தினகரன் கொடுத்த பதவியை தூக்கி எரிவதன் மூலம் அவர்களின் அரசியல் ஏணி சறுக்கத் தொடங்குவதை உணர முடிகிறது.
சென்னை: தினகரன் கொடுத்த பதவியை தூக்கி எரியும் எம்எல்ஏக்கள்,எடப்பாடி பழனிசாமிக்கே பவர் இருப்பதால் அடுத்தடுத்து ஜகா வாங்கி வருகின்றனர் எம்எல்ஏக்கள்.
கெடு முடிந்தது கட்சியை தினகரன் தான் கைப்பற்றப்போகிறார்.. அணிகளை இணைப்பார் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு இருந்தது. ஆனால், நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தான் கட்சி அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது, எப்போது செல்வேன் என்பதை செல்லும் போது சொல்வேன் என்று மழுப்பலாகவே பதில் சொன்னார்.
என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்றும் தினகரன் கூறினார். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதே செல்லாது என்று தான் தேர்தல் ஆணையத்தை அணுகியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, தற்போது சசிகலாவால் நியமிக்கப்பட்ட தனக்கு கட்சியில் எல்லா உரிமையும் இருப்பதாகவும் தினகரன் முழங்கினார்.
பலத்தை நிரூபிக்க ஆதரவாளர்களுக்கு பதவி
கட்சியில் தனக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்கும் விதமாக தனக்கு ஆதரவான எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்கினார் தினகரன். கட்சித்தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கட்சியில் பதவி கொடுப்பதெல்லாம் அரசியல் ட்ரெண்ட் தான். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் வழக்கமாக தனக்கு பதவி கிடைக்கவில்லை என்று தான் முட்டி மோதுவார்கள் அரசியல்வாதிகள்.
என்னாடா புதுசா இருக்கு
தினகரன் விஷயத்திலோ அது தலைகீழாக மாறியுள்ளது. எங்களுக்கு ஜெயலலிதா கொடுத்த எம்எல்ஏ பதவியே போதுங்க கட்சியில வேறு பதவி எதுவும் வேண்டாம் என்று அடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் ஜகா வாங்கியுள்ளனர். சத்யா பன்னீர் செல்வம், பழனி மற்றும் ஏ.கே.போஸ் ஆகிய மூன்று எம்.எல்ஏக்களுமே தினகரன் கொடுத்த கட்சிப் பதவிகளை வேண்டாம் என்று தூக்கிப் போட்டுள்ளனர்.
வழக்கின் பிடியில் உள்ள தினகரன்
என்னதான் தினகரன் தான் கட்சியில் எல்லாமே என்று சொல்லி வந்தாலும், அவருடைய மவுசு என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது பதவி கொடுத்த எம்எல்எக்கள் ஜகா வாங்கியுள்ள கதை. இரட்டை இலை லஞ்ச வழக்கு, அந்நிய செலாவணி மோசடி வழக்கு என்று வழக்கின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார் தினகரன்.
எதுக்கு வம்பு?
தற்போதும் கூட தினகரன் ஜாமினில் தான் வெளிவந்துள்ளார், இந்த நிலையில் அவர் கட்சியில் கொடுத்த பதவியை ஏற்றுக் கொண்டால் இப்போது இருக்கும் எம்எல்ஏ பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்பதே எம்எல்ஏக்களின் அச்சமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆட்சியிலும், கட்சியிலும் பவர் இருக்கும் என்பதை உணர்ந்தே ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் பயந்து ஓடுவதாகவும் கூறப்படுகிறது.
ஏன் தயக்கம்?
தினகரன் ஜெயலில் இருந்து வந்தவுடன் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வீர வசனம் பேசியவர்களில் திருப்பரங்குன்றம் எம்எல்எ போஸ் முக்கியமானவர். கட்சித் தலைமை தினகரன தான் என்று சொன்னவர் இன்று பதவி வேண்டாம் என்று தினகரனை உதாசினப்படுத்தியுள்ளார்.
சறுக்கும் அரசியல் ஏணி
அதிமுகவில் பதவிக்காக எப்படியாவது சின்னம்மா பிடிக்க ஆள் தேடிய நிலை மாறி தற்போது சின்னமாவின் உறவினர் தானாக முன்வந்து கொடுக்கும் பதவியை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் அரசியல் ஏணி சறுக்க ஆரம்பித்துள்ளதாக கருதுகின்றனர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள்.