பொது இடங்களில் குறி வைக்கப்படுகிறாரா தமிழிசை?
Recommended Video
சென்னை: பொது இடங்களில் வைத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறி வைத்து விமர்சனத்திற்கு உள்ளாகிறாரா என்று அக்கட்சி பிரமுகர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
சமீபத்தில் விமானத்தில் பயணித்த தமிழிசை சவுந்தராரஜனை பார்த்து பாசிச பாஜக ஒழிக என சோபியா என்ற மாணவி, கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு நிருபர்களுக்கு தமிழிசை பேட்டியளித்தபோது, கதிர் என்ற ஆட்டோ டிரைவர் குறுக்கே புகுந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பினார்.
ஆட்டோ டிரைவர்
அப்போது தமிழிசை அருகே நின்ற பாஜக நிர்வாகிகள், அந்த ஆட்டோ டிரைவரை கட்டாயப்படுத்தி, அங்கேயிருந்து தள்ளிவிட்டு வெளியேற்றினர். இந்த காட்சிகள் வீடியோக்களில் பதிவாகி தேசிய அளவில் வைரலாகியுள்ளது. பின்னால் நடந்த சம்பவத்தை தமிழிசை கவனிக்காமல் சிரித்தபடி பேட்டியளித்து கொண்டிருந்தார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
[ஆதங்கத்தை சொன்னால் அடிக்கிறார்கள்.. தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் குமுறல்!]
நியாயம்
மாணவி, சோபியாவும், ஆட்டோ டிரைவர் கதிரும் எழுப்பிய பிரச்சினைகள் நியாயமானவை என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இருவருமே அதை எழுப்பிய இடம்தான் சரியில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விமான பயண விதிமுறைகள்
அமெரிக்க இரட்டை கோபுர விமான தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு உலகமெங்கும் விமான பாதுகாப்பு விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விமான பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த சம்பவமும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. எனவேதான் விமானத்திற்குள் வைத்து சேபியா கோஷமிட்டது தவறு என விமர்சனம் எழுந்தது. தமிழிசை சோபாவை கடுமையாக கையாண்டார் என்ற குற்றச்சாட்டில் உண்மையுள்ளதை போலவேதான் விமானத்திற்குள் கோஷமிட்டது தவறு என்பதையும் நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
பிரஸ் மீட்
இந்த நிலையில்தான் தமிழிசை அளித்த பிரஸ் மீட்டின்போது திடீரென பின்னால் வந்து கதிர் என்ற ஆட்டோ டிரைவர், அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். பிரஸ் மீட் என்பது பத்திரிகையாளர்கள் மட்டுமே கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்ட இடம். ஆனால், திடீரென இப்படி ஒருவர் குறுக்கே புகுந்து பேசுவது தவறான விஷயமாகும். இப்படி ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் எங்குமே, எந்த தலைவர்களும் பிரஸ் மீட் செய்ய முடியாது. சோபியா போல எல்லோரும் கோஷமிட்டால் எந்த தலைவரும் விமானத்தில் பயணிக்க முடியாது.
கட்டுக்குள் கருத்துரிமை
கேள்வி கேட்பது நல்ல விஷயம்தான். ஆனால், இடம், பொருள் கண்டுதான் கேள்வி கேட்க முடியும். கருத்துரிமை வழங்கப்பட்ட இதே, ஜனநாயக நாட்டில்தான் அவதூறு பேச்சுக்கு எதிராக வழக்கு போட சட்டத்தில் இடம் உள்ளது என்பதையும், கவனிக்க வேண்டும். எந்த சுதந்திரமும் கட்டுக்குள் இருந்தால்தான், அந்த சுதந்திரத்திற்கே மதிப்பு என்பதே நடுநிலையாளர்கள் கருத்து.