நிரப்பப்படும் அரசுப் பணிகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் அவசியம்: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இனி நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால் அதில் அவர் தேர்வாகவில்லை.
அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் இது குறித்து பத்திரிகைகளில் எந்த ஒரு விளம்பரமும் வெளியாகவில்லை.
இதற்கு எதிராக ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், வேலைவாய்ப்புச் சட்டம் 1959-ன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதனால் அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணணக்கு வந்தது.
வழக்கின் விசாரணைக்குப் பிறகு,. ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.