6 மாதத்தில் ரூ.20 கோடி லஞ்சம்: அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை.. வருமான வரித்துறை பரிந்துரை
Recommended Video

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பல கோடி
இந்நிலையில் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள வீட்டில் ரூ 20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விஜயபாஸ்கர் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி அளிக்க
இந்நிலையில் புதுக்கோட்டையில் கல் குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளது குறித்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

வருமான வரித் துறை
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.

பணி நியமனம்
அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தில் ரூ 12.96 லட்சத்தை கவர்களில் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கவர்களில் சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான உத்தரவுகளுடன் லஞ்சப்பணமும் இருந்ததுள்ளது.

வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

விவரங்கள்
எனவே லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் எவ்வளவு தொகை, எந்த நாளில் யாரிடம் லஞ்சமாக பெற்றார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமைச்சர் மறுப்பு
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து அமைச்சர் மீது இதுபோன்ற புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications