தொண்டர்கள் ஆவேசத்தால் காவல் நிலையம் ஓடிய ஐடி அதிகாரிகள்.. போலீஸ் உதவியோடு ரெய்டு மீண்டும் தொடக்கம்
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடத்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் ஐடி அதிகாரிகள் தஞ்சமடைந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ரெய்டு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் வி செந்தில் பாலாஜி. கரூரை சேர்ந்த இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இந்தநிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இருக்கும் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அதிகாலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை திமுகவினர் உடைத்தனர்.
அங்கு அதிகாரிகளை வீட்டுக்குள் உள்ளே விடாத வகையில் திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். அந்த இடத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் உள்ளே சென்ற அதிகாரிகள் காரில் இருக்கும் லேப்டாப், சில கோப்புகளை எடுக்க வந்த போது அவர்களது கையில் இருந்த கோப்புகளை இழுத்து கீழே போட்டதாக தகவல்கள் வெளியாகின.
துணை மேயர் தாரணி சரவணன், காளியாபுரத்தில் பெரியசாமி, ராமகிருஷ்ணாபுரம் அசோக் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனையானது நிறுத்தப்பட்டது. திமுகவினர் கார் கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாலும் அதிகாரிகளை அச்சுறுத்தி வருவதாலும் அதிகாரிகள் கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து கரூர் எஸ்பி சுந்தரவதனத்திடம் அதிகாரிகள் மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 9 இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வருமான வரித் துறை ரெய்டு குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பதையும் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் 3 வாகனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 9 இடங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு ரெய்டு தொடங்கியுள்ளது. 9 இடங்கள் தவிர கரூரில் மற்ற இடங்களில் காலை முதலே வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நீடித்து வருகிறது.