ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்.. திவாகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை.. எந்த நேரத்திலும் கைது?
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனிடம் அவர்கள் துருவி துருவி விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீடு, நகரிலுள்ள மற்றொரு வீடு, அவருக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் நேற்றுடன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் சிக்கின
இன்றும் சோதனைகள் தொடர்ந்த நிலையில், சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திவாகரனின் வீடுகளில் சோதனை செய்து முடித்துள்ள வருமானவரித்துறையினர். கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் மட்டும் சோதனை செய்து வருகின்றனர்.
கல்லூரியில் விசாரணை
கல்லூரியின் காசாளர் அன்புக்கரசி, கல்லூரியை நிர்வகித்து வந்த விநாயகம் ஆகியோரிடமும் துருவி துருவி விசாரணை நடந்தது. அவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களையெல்லாம் புட்டு, புட்டு வைத்துவிட்டனர்.
விசாரணை வளையத்தில் திவாகரன்
இந்த நிலையியில், இன்று, திவாகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். ரெய்டில் கிடைத்த தகவல்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ஆதரவாளர்கள் குவிந்தனர்
திவாகரன் மீது வருமான வரித்துறை வழக்கு பாயுமா? அவர் கைது செய்வாரா? என்ற பதற்றம் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரியை சுற்றி ஆதரவாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு
இதையடுத்து செங்கமலத்தாயார் கல்லூரியை சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.