பிறந்தது கார்த்திகை .. சரண கோஷத்துடன் மாலை போட்டு விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
சென்னை: கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.
ஒரு மண்டலமான, 41 நாட்களுக்கு விரதம் இருந்து மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள் பக்தர்கள். கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
நேற்று மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். ஆங்காங்கு உள்ள ஐயப்பன் கோவில்களிலும், பிற கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் மகாலிங்கபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை போட்டுக் கொண்டனர்.
ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஐயப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களிலும் அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் சாமி கும்பிட குவிந்து வருகிறார்கள்.