பிடிவாதம், பேராசை, மோகம்... கருணாநிதியை வாழ்த்திய ஜெகத்ரட்சகன்!!
சென்னை: ‘எத்தனை முறை தோற்றாலும் பாழாய் போன தமிழர்களுக்காகவே வாழும் கலைஞர், அன்னைத் தமிழின் ஆண் வடிவம்' என இன்று தனது 91வது பிறந்தநாள் காணும் திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்.
திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கடந்த மூன்று நாட்களாகவே திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மேலும், திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், மலேசிய அமைச்சர் டத்தோ எம்.சரவணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் ராஜேஷ், பர்வீன் சுல்தானா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது:-.
சரித்திர நாயகனே....
வெற்றி வரும் என்றாலும் வீழ்ச்சி வரும் என்றாலும் சற்றேனும் அதிர்வடையாத சரித்திரநாயகன் கலைஞர் கருணாநிதி. எத்தனை முறை தோற்றாலும் பாழாய் போன தமிழர்களுக்காகவே வாழ்கிறார். அன்னைத் தமிழின் ஆண் வடிவம் அவர்.
எழுத்துக்காக போர் தொடுத்தவர்....
பொன், பொருள், மண்ணுக்காக போர் நடந்த காலத்தில் மொழிக்காக போர் தொடுத்தவர் கலைஞர். அவரது எழுத்துக்கள். ஆயுத கிடங்கு. அந்த எழுத்துக்களை தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.
கலைஞர் எனும் போராளி...
சங்கத் தமிழ்சாறு அங்கமெலாம் பரவியதால் பொங்கி வரும் இளமையுடன் புன்னகைக்கிறார். வாசமலர் கூட்டம் வந்து வந்து போவது போல் ஓசை தமிழ் சொற்களை உதிர்க்கிறார். இயங்காமல் பூமி இருந்தாலும் என் கைகள் எழுதாமல் இருக்காது என வாழ்கிறார். அக்கினியில் நீராடி, அன்று முதல் போராடி, இன்று வரை போராளி நான் என வாழ்கிறார்.
தொண்டையே துணையாக்கியவர்....
லட்சியத்தில் பிடிவாதம் இயக்கத்தில் போராசை மொழிப்பற்றில் மோகமென இருக்கிறார். தன்னை தமிழுக்கும் தன் வீட்டை நாட்டுக்கும் முன்பே கொடுத்து விட்டார். தொண்ணூறு கடந்தாலும் தொண்டையே துணையாக்கி மண் வியக்க நடைபோடுகிறார்.
கலைஞர் ஒரு புத்தகம்...
அண்ணாவும் பெரியாரும் அச்சடித்த புத்தகம் கலைஞர். எழுந்தாலும் விழுந்தாலும் எதிரிகளின் தூக்கத்தை எழுத்தாலே கலைக்கிறார். அவர் பல்லாண்டு வாழ வேண்டும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
தமிழ் என்றால் கலைஞர்...
அதனைத் தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது, ‘‘பெருக்கூட்டத்தை கூட்டி பி.கே.சேகர் பாபு பிரமாதமாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். தமிழ் என்றும் இளமையானது கலைஞர்தான் தமிழ். வயதில் அல்ல இளமை அவரது உள்ளத்தில் இளமை இருக்கிறது.
கலைஞரின் நூற்றாண்டு விழா...
தினமும் அதிகாலை எழுந்து உடல் பயிற்சி செய்து பத்திரிகைகள் படித்து கட்சியினரை சந்தித்து அறிவாலயம் செல்வது என தினமும் வழக்கமான பணிகளை செய்கிறார். கலைஞரின் நூற்றாண்டு விழாவையும் சேகர்பாபு கொண்டாடுவார் என்றார்.