'அம்மா'வால் சிறையில் இருந்தபடியே எவ்வாறு கட்சியை எளிதாக நடத்த முடிகிறது?
சென்னை: சிறையில் இருந்தாலும் ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தி வருகிறார்.
சிறையில் இருந்தபடியே கட்சியை நடத்தும் தலைவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் சிறையில் இருந்தபடியே கட்சியை நடத்திய தலைவர்கள் ஆவர்.
பெரும்பாலான கட்சிகள் தலைவர் என்ற ஒருவரை மட்டுமே நம்பி செயல்படுவதால் சிறைக்கு சென்றாலும் அவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டிய நிலை உள்ளது.

அதிமுக
அதிமுக என்றாலே ஜெயலலிதாவின் முகம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். அவர் தேர்தல் களத்தில் குதித்தால் தான் வாக்குகள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது என ஜெயலலிதா பற்றிய புத்தகம் எழுதியுள்ள வசந்தி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கட்சி
அதிமுகவினர் ஜெயலலிதாவின் சொல்லுக்கு கீழ்படிவதால் அவரால் சிறையில் இருந்தே கட்சியை எளிதாக வழிநடத்த முடிகிறது. ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்தாலே அதை பார்த்து தரையில் விழுந்து வணங்குபவர்கள் அதிமுகவினர்.

மக்கள் முதல்வர்
ஜெயலலிதா சிறையில் இருந்தாலும் அவர் எங்கும் நிறைந்திருப்பதாக கருதும் அதிமுகவினர் அவரை மக்களின் முதல்வர் என்று தற்போதும் கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்தது யாரோ?
ஜெயலலிதா இல்லாவிடில் அதிமுக ஸ்தம்பித்துவிடும் நிலை உள்ளது. அவர் இல்லாத நிலையில் யார் கட்சியை கவனிப்பது என்பது குறித்து யாரும் யோசிக்கவில்லை. முன்னதாக அவர் கடந்த 2001ம் ஆண்டில் கைதானபோதும் சரி, தற்போதும் சரி கட்சியினர் திண்டாடிவிட்டனர்.

வார்த்தை
ஜெயலலிதாவை சிறையில் அடைத்தவுடன் அதிமுகவினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த ஜெயலலிதா யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்புடன் பன்னீர் செல்வத்திடம் தெரிவித்தார். அதன் பிறகே அதிமுகவினர் சற்று அடங்கினர். ஜெயலலிதாவின் வார்த்தைக்கு மதிப்பு உள்ளதால் தான் அவரால் சிறையில் இருந்து கட்சியை எளிதாக நடத்த முடிகிறது.

அமைச்சரவை
மன்மோகன் சிங்கால் அமைச்சரவையை தன் விருப்பப்படி மாற்றியமைக்க முடியாதபோது ஜெயலலிதா சீட்டுக்கட்டு விளையாடுவது போன்று அமைச்சரவையை மாற்றி வந்தார். தமிழகத்தில் நிர்வாக மாற்றம் அடிக்கடி நடப்பது என்று முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள்
ஜெயலலிதா சிறையில் இருந்தாலும் தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அதிமுக அமைச்சர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications