மதுரையில் பட்டையைக் கிளப்பிய சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு: கிராம மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மதுரை சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
மதுரை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும் 750 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆகியோர் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்தனர். இதில் சிறப்பாக விளையாடிய காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு மாடு பிடி வீரர்களை ஊக்குவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சத்திரப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், கடந்த இரண்டு வாரங்களாகவே இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாய் நடைபெற்று வந்தன. மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற்று இவ்விழா நடைபெறுவதால், ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் நடைபெற்றது.