ஜல்லிக்கட்டு நடத்துவோம் - நெல்லையில் திரண்ட இளைஞர்கள் பட்டாளம் #WeNeedJallikattu
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லையில் முகநூல் நண்பர்கள் குழு பொதுக்கூட்டம் நடத்தினர். பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், முகநூல் நண்பர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ஞாயிறன்று பற்ற வைக்கப்பட்ட இந்த தீப்பொறி மதுரை, திருச்சி, தஞ்சாவூர் என பரவி திருநெல்வேலி வரை பற்றி எரிகிறது.
நெல்லை பாளையங்கோட்டை ஜோதிபுரம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கூட்டம் நடத்தப்பட்டது. முகநூல் தொடர்பு மூலம் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். காளைகள் போல முகமுடி அணிந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர்.
பொங்கல் பண்டிக்கை இன்னும் சில நாட்கள் வர இருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் ஜல்லிக்கட்டு பெரும்பாலும் நடத்தப்படாவிட்டாலும் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுகிறது. இதற்கும் தடை உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் ஆர்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்ட முகநூல் நண்பர்கள் திரண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காளைகளுடன் வந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி கண்களில் கறுப்புத்துணியினை கட்டி திருநெல்வேலியில் ஆட்சியரை சந்தித்து தேசிய மாணவர் அமைப்பினர் மனு அளித்தனர்.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் 2ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டை, சீவலப்பேரி, கிருஷ்ணபேரி, திசையன்விளை, மானூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து உள்ளோம். அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்த போராட்டம் கரூர், மதுரை, நெல்லை சேலம், புதுச்சேரி, தூத்துக்குடி திருநெல்வேலி என தீவிரமடைந்துள்ளது. கரூரில் தடைகளைத் தகர்த்து உரிய அனுமதியுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பேரணி நடத்தவுள்ளதாக முகநூலில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.