ஜாட் இனத்தவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலி: 144 தடை உத்தரவு அமல் !
ஹரியாணா: ஹரியாணா மாநிலம் ரோட்டக் பகுதியில் ஜாட் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிழவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ரோட்டக் பகுதியில் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
அப்போது ஏராளமான வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ரோதக், ஜிந்த், பிவானி, சோனேபட் மற்றும் ஹிஸார் ஆகிய பகுதிகளில் வன்முறை பரவுவதை தடுக்க இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளை மாநில அரசு துண்டித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜாட் சமூகத்தை இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஜாட் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.