அப்பல்லோவில் ஜெயலலிதா டிவி பார்த்தார், தயிர்சாதம் சாப்பிட்டார்- டாக்டர்கள்
அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா சுய நினைவோடுதான் இருந்தார் என்றும் டிவி பார்த்தார், தயிர்சாதம் சாப்பிட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடு என்று செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவோடுதான் இருந்தார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் தயிர்சாதம் சாப்பிட்டார் என்றும், டிவி பார்த்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜெயலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். ஜெயலலிதா மரணமடைந்து 60 நாட்கள் கழித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களும் இன்று விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் வந்தார். அவருக்கு அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொண்டபோது அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அடுத்ததாக அவருக்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது.
செப்சிஸ் நோய் தாக்கம் உடல் முழுதும் பரவியதால் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்தாக செயலிழக்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆனால், அவருக்கு துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த போது அவர் சுயநினைவுடனேயே இருந்தார். அவருக்கு அவ்வப்போது மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் அவர் தூக்கநிலையில் இருந்தார். தேர்தல் ஆணைய நோட்டீஸில் ஜெயலலிதா சுயநினைவுடனே கைரேகை வைத்தார். கைகளில் வீக்கம் இருந்ததால் கையெழுத்திட முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.
யாரை சந்திப்பது என்று ஜெயலலிதாவே முடிவு செய்தார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி சசிகலாவிடமும், தலைமைச் செயலாளரிடமும், சுகாதாரத்துறை செயலாளரிடமும் தெரிவிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் கூறும் போது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்திருந்தார். உலகத்தரத்திலான சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது. சிறந்த மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். என்னுடைய குழந்தைகள், உணவு பற்றியும் பேசினோம் என்றார்.
சசிகலாவிடம் நன்கு பேசினேன். ஜெயலலிதாவை சசிகலா நன்கு கவனித்தார். பிசியோ தெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு கொடுத்தார். லண்டன் சென்று சிகிச்சை பெறுவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்று பியல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அப்பல்லோ மருத்துவர் பாபு, சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா டிவி பார்த்தார், தயிர்சாதம் சாப்பிட்டார் என்று கூறினார்.
மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார் என்றும், மாரடைப்பை கணிக்க இயலாது என்றும் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் ஜெயலலிதா ஒரு வாரத்தில் வீடு திரும்பியிருப்பார் என்றும் பாபு தெரிவித்தார்.
கடைசியாக மூச்சு விட சிரமப்படுவதாக கூறினார். ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட உடன் அவர் இறந்துவிட்டார் என்றும் பாபு தெரிவித்தார்.