வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்துக்கு மாற்றியது ஏன்?- ஜெ. கேள்வி
சென்னை : வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேரவையை தூக்கியெறிந்துவிட்டு, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தை எழுப்பி அங்கே கொண்டுபோய் வைத்தது ஏன் என்று திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியத்திடம் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையில் மோனோ ரயில், மெட்ரோ ரயில் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இடையே கடும் வாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
மா. சுப்ரமணியன்
மோனோ ரயில் தொடங்குவதாக சொல்லிவிட்டு மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே செயல்படுத்துவது ஏன் என்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா பதில்
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கி நடந்து வருவதால் பாதியில் நிறுத்த முடியாது என்றும், திட்டத்தை தொடங்குவது, முடிப்பதில் யார் வல்லவர்கள் என்பதை வீராணம் திட்டம் ஒன்று போதும் என்றும் கூறினார்.
அமளி துமளி
முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்த மா.சுப்பிரமணியன், பேச அனுமதி கோரினார். அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வரலாற்று சிறப்பு
பேச்சின் தொடக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டமன்றம் என்று கூறி விட்டு சபாநாயகரை பற்றி விமர்சித்தார். உடனே அதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார். பின்னர் இந்த அவை நடுநிலையோடுதான் நடக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர், பேச்சின் தொடக்கத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிகுந்த இந்த சட்டமன்றப் பேரவை என்று குறிப்பிட்டார்கள். அவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேரவை என்பதால்தான் இதையே தூக்கியெறிந்துவிட்டு, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தை எழுப்பி அங்கே கொண்டுபோய் வைத்தார்களா என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும் என்றார்.
குப்பையில் நாற்காலி
தாங்கள் இந்த அவையில் நடுநாயகமாக வீற்றிருக்கின்றீர்கள் என்று பேசினார். இதற்கு முன்பு ஒருநாள் பேசிய ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரும் இந்த நாற்காலிக்குள்ள வரலாற்றுச் சிறப்பைப்பற்றி பேசினார். இவ்வளவு பேசுகின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சித் தலைமை இந்த அவையை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் போது, இந்த நாற்காலியையே தூக்கி குப்பையில் போட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.
காரசார விவாதம்
இப்போது பேரவைத் செயலாளராக இருக்கின்ற ஜமாலுதீன் தான் அதைக் காப்பாற்றி, பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார் என்பதும் உண்மை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஜெயலலிதா பேச அதற்கு விளக்கம் தர மா. சுப்ரமணியன் முயற்சிக்க அவையில் இன்றைய விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது.