ஜெ.வுக்கு ஜாமீன் கிடைப்பதில் சட்டச் சிக்கல் இல்லைதான்.. ஆனால் நீதிபதி நினைத்தால்தான் கிடைக்கும்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், அது நீதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அவர்கள் கூறுவதால், ஜெயலலிதாவின் மனுவை விசாரிக்கும் நீதிபதி நினைத்தால்தான் ஜாமீன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் இல்லாததால் ஏற்பட்ட குழப்பத்தைக் காரணம் காட்டி நீதிபதி ரத்னகலா விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்காக ஆஜரான பிரபல சட்ட வல்லுநர் ராம்ஜேத்மலானி, சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி இதை அவசர வழக்காக, அரசு வக்கீல் இல்லாமலும் கூட விசாரிக்கலாம் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் வாதிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டிஎச் வகேலாவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று இந்த மனு மீண்டும் அதே நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதி 2 நிமிடங்களிலேயே வழக்கை ஒத்திவைத்து விட்டார்.
இது அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு கீழ், தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து, அப்பீல் செய்யும் போது, அந்த நபரை, ஜாமீனில் விடுவிப்பது சகஜம் தான். அது நீதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது
முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு, கலர் டிவி ஊழல் வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனையை, தனி நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து, அப்பீல் செய்த மனு, விசாரணைக்கு வந்த போது, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இது கிட்டத்தட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கும் பொருந்தும். எனவே அவர்களுக்கு ஜாமீன் அளிப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் சட்டப் பூர்வமாக பார்த்தால் சிக்கல் இல்லை என்பதே அவர்களது கருத்து.
எனவே ஜெயலலிதாவுக்கும் கூட ஜாமீன் கிடைக் சட்ட ரீதியாக தகுதி உள்ளது என்றே தெரிகிறது. ஆனால் நீதிபதி அடுத்தடுத்து விசாரணையை ஒத்திவைத்து வருவது அதிமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications