மழையால் பாதிக்கப்பட்ட டூவீலர்கள், ஆட்டோக்களுக்கு இலவச சர்வீஸ் - ஜெ. அறிவிப்பு
சென்னை: சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக சர்வீஸ் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கன மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் பெருமளவில் பழுதடைந்துள்ளன.
இவற்றை சரி செய்ய வசதியாக அரசு சார்பில் இலவசமாக சேவை முகாம்கள் நடைபெறவுள்ளது. டிசம்பர் 12ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை 10 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும்.
இந்த சேவை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த வி்வரம் விரைவில் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
200க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் இந்த முகாம் நடைபெறும். அங்கு இலவசமாக தங்களது வாகன பழுதை இரு சக்கரவானதாரிகள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் நீக்கிக் கொள்ளலாம்.
டிவிஎஸ் இந்தியா, யமஹா, பஜாஜ் ஆட்டோ, ஐஷர் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை செய்ய முன்வந்துள்ளன என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.