அரசியல் வரலாற்றில் அதிமுக புதிய சாதனை.. 4 ராஜ்யசபா சீட்டுகளுமே நெல்லை, தூத்துக்குடிக்கு!
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலி்ல் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா, லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே இந்த ராஜ்யசபா தேர்தலில் அதிரடியாக இந்த இரு மாவட்டங்களுக்கு மட்டும் சீட் கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை இன்று ஜெயலலிதா அறிவித்தார்.
நெல்லை- தூத்துக்குடி மேயர்கள்
இதில் இருவர் பெண்கள். அதில் விஜிலா சத்தியானந்த் நெல்லை மேயர் ஆவார். அதேபோல சசிகலா புஷ்பா தூத்துக்குடி மேயராவார்.
சசிகலா மாநில மகளிர் அணிச் செயலாளர்
சசிகலா அதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறார். விஜிலா சத்தியானந்த் நெல்லை மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
நெல்லை மா.செ. முத்துக்கருப்பன்
இதேபோல மற்ற இருவரில் ஒருவரான முத்துக்கருப்பன் நெல்லை மாவட்டஅதிமுக செயலாளராக இருப்பவர்.
தூத்துக்குடி சின்னையா
இன்னொருவரான சின்னையா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஆவார். மேலும் இவர் அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெணக்ள் பாசறையின் இணைச் செயலாளராக இருக்கிறார்.
ஏன் இப்படி இரு மாவட்டங்களுக்கு மட்டும்...
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நான்கு சீட்டுக்களையும் இரு மாவட்டங்களுக்கு மட்டும் வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா. இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் இப்படி மொத்த சீட்டுக்களையும் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு யாருமே வழங்கியதில்லை.
நான்கு சாதி... ஒரு தேர்தல்.. தொலைநோக்குப் பார்வை
ஆனால் இந்த நான்கு பேரையும் இரு மாவட்டங்களிலிருந்து முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்ததற்கு லோக்சபா தேர்தல் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதாவது இந்த நான்கு வேட்பாளர்களுமே நான்கு சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த நான்கு சாதியுமே இந்த இரு மாவட்டங்களிலும் முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளவை. எனவே லோக்சபா தேர்தலில் இது கைகொடுக்கும் என்பதால்தான் இப்படி ஒரு அதிரடியை ஜெயலலிதா செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.
யார் யாருக்குப் பிரதிநிதித்துவம்?
வேட்பாளர்களில் சின்னத்துரை தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். முத்துக்கருப்பன் தேவர் சமுதாயத்தை் சேர்ந்தவர். விஜிலா சத்தியானந்த் நாடார் பிரிவைச் சேர்ந்தவர். சசிகலா புஷ்பா, பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ. கணக்கு பலிக்குமா
ஜெயலலிதாவின் இந்த அரசியல் ஜாதிக் கணக்கு எந்த அளவுக்கு அதிமுகவுக்குக் கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி அதிமுகவினர் உற்சாகம்
நான்கு ராஜ்யசபா சீட்டுக்களையும் தங்களது மாவட்டத்துக்கே முதல்வர் ஜெயலலிதா கொடுத்திருப்பதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளதாகவும், பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.