காணும் பொங்கல் ... அதிமுகவினர் ஜெயலலிதாவை கண்ட பொங்கல்
சென்னை: தமிழகமே ஞாயிறன்று காணும் பொங்கலில் திளைத்திருக்க சென்னை அதிமுகவினரோ எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தலைவி ஜெயலலிதாவை நேரில் கண்டதில் உற்சாக பொங்கல் கொண்டாடினர்.
அதிமுகவினருக்கோ தீபாவளி, பொங்கல், தேர்திருவிழா எல்லமே ஜெயலலிதா தரிசனம் தரும்நாள்தான். ஆறு மாதமோ ஒருவருடமோ காத்திருக்கும் அதிமுகவினருக்கு அத்தி பூத்தார் போல தரிசனம் தருவார் ஜெயலலிதா. போயஸ்தோட்டத்தில் இருந்து தினசரி தலைமைச் செயலகத்திற்கு ஜெயலலிதா சென்றாலும் கட்சியின் முக்கிய நபர்கள் மட்டுமே முக்கிய சந்திப்புகளில் நின்று கரம் கூப்பி தரிசனம் செய்வார்கள்.
சாதாரண தொண்டர்களுக்கோ ஜெயலலிதாவின் வருகை என்பது தேர்திருவிழா போலத்தான். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் இதனால் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது, முதல்வர் பதவியும் பறிபோனது. ஜெயலலலிதா கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த போது சென்னை நகரமே திக்குமுக்காடியது. விமான நிலையம் முதல் போயஸ்கார்டன் வரை திரண்டு நின்று பூமழை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், மீண்டும் முதல்வராகவும் வேண்டு கோவில் கோவிலாக ஏறி இறங்கினர் அதிமுகவினர். ஜாமீனில் வெளியே வந்து போயஸ்கார்டன் வீட்டிற்குள் புகுந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து குமாரசாமி புண்ணியத்தால் விடுதலை பெற்ற பின்னர் மே 22, 2015 அன்று மீண்டும் வெளியே வந்தார். அப்போதும் நகரையே ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கு குவிந்தனர் அதிமுகவினர். மே 23ம் மீண்டும் 5வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நாள்தான் அதிமுகவினருக்கு தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான்.
எங்க குலசாமி
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்னும் காவிய நாயகர் மீதான பக்தி இன்றைக்கும் அதிமுகவினரிடையே இருக்கிறது. எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தையும், அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் கையிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக்கொண்டு பவனிவருகின்றனர் அவரது ரசிகர்கள். எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டி பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர். அதேபோலத்தான் ஜெயலலிதாவையும் 'குலசாமி'யாக பாவித்து கும்பிடுபவர்கள் இருக்கின்றனர்.
ஜெயலலிதா தரிசனம்
தமிழக முதல்வராக ஜெயலலிதா மக்களை சந்திப்பது வேறு... அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக அதிமுக தொண்டர்களை சந்திப்பது என்பது வேறு.
போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்து ஜெயலலிதா தொண்டர்களை சந்திப்பது ஆண்டுக்கு சிலமுறைதான். அது ஆண்டின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் தினத்தன்றும், அதிமுக உருவான நாள் கொண்டாட்டத்தின் போதும் கட்சி அலுவலகத்திற்கு வருவார். எம்.ஜி.ஆர் நினைவுநாள் தினத்தன்று
நீங்க வந்தா மட்டும் போதும்!
ஜெயலலிதா தொண்டர்களிடம் எதுவும் பேசுவதில்லை...அவர் காரில் போகும் போது தன்னைப் பார்த்து கும்பிடுபவர்களை பார்த்து புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டபடி வருவார் அல்லது இரட்டை விரலை உயர்த்தியபடியே தொண்டர்களை கடந்து செல்வார். அந்த ஒரு நொடிக்காகவே பல மணிநேரம் காத்திருந்தவர்கள் இருக்கின்றனர்.
சாலைகளில் காத்திருப்பு
ஜெயலலிதா கட்சி அலுவலகத்திற்கு வருகிறார் என்று தெரியவந்தாலே ஆளுக்கு முதலாக வந்து வரிசையில் நின்று கொள்கின்றனர். நேற்றும் அப்படித்தான் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. 11 மணிக்குத்தான் ஜெயலலிதா வருகிறார் என்று கூறப்பட்ட நிலையிலும் காலை 7 மணிக்கே கட்சித்தொண்டர்கள் சாலையில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏன் இப்படி என்று கேட்டால் அப்போதான் அம்மாவை நல்லா பார்க்கமுடியும் என்கின்றனர் பெண்கள்.
கோவிலும் குலதெய்வமும்
கோவிலுக்கு சென்று பயபக்தியோடு இறைவனை தொழுவதைப் போலவே ஜெயலலிதாவைப் பார்த்து இரு கரம் கூப்பி வணங்கியபடியே காத்திருந்த தொண்டர்கள், ஜெயலலிதா வரும் வாகனத்தைப் பார்த்த உடனேயே உற்சாக குரல் எழுப்பினார்கள். மெதுவாக நடந்து வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த போது அதிமுகவினர் எழுப்பிய முழக்கம் ராயப்பேட்டையை அதிரவைத்தது. காணும் பொங்கல் தினமான நேற்று அதிமுகவினர் ஜெயலலிதாவை கண்ட பொங்கலாக மாறியது.
குட்டி எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் மீதான பக்தியினால் தங்களின் வாரிசுகளை எம்.ஜி.ஆர் போல அலங்கரித்து கொண்டு ஜெயலலிதாவின் பார்வையில் படுமாறு நின்று கொண்டு உற்சாக முழக்கமிடுகின்றனர். எங்களுக்கு எம்.ஜி.ஆர்தான் எல்லாமே, அவருக்கு அப்புறம் அம்மாதான் எங்க குலசாமி என்கின்றனர் இவர்கள்.
பூரண கும்ப மரியாதை
பெண்களோ பச்சை வண்ண ஆடை உடுத்தி பூரண கும்பத்துடன் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். எங்களுக்கு அம்மாதான் எல்லாமே மத்ததெல்லாம் அப்புறம்தான் என்பது மகளிர் அணியினரின் கருத்தாக உள்ளது. ஆறாவது முறையாகவும் அம்மா முதல்வராவார் அதற்காகவே நாங்கள் வரும் தேர்தலில் உழைப்போம் என்று கூறி வருகின்றனர்.
தொண்டர்களுக்கு உற்சாகம்
ஒரே வாரத்தில் இருமுறை ஜெயலலிதாவை சந்தித்த உற்சாகத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர். 6 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமையன்று தலைமை அலுவலகம் வந்த ஜெயலலிதா, அப்போதே தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று காணொலி மூலம் பேசினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்காக எழுதிய கடிதத்தில் தொண்டர்களை தேர்தலுக்கு களப்பணியாற்றுங்கள் என்று கூறியிருந்தார். காணும் பொங்கலான நேற்று தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.
எதிரிகளுக்கு நிலநடுக்கம்
தீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன். இன்னும் நூறாண்டுகள் வரை அதிமுக மக்கள் பணியாற்றும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் எதிரிகளுக்கு நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெற்றியை பெற களப்பணியாற்றுங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.