மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஜெ. ஓணம் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திட வாமன அவதாரம் தரித்து தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு, ஓர் அடியை வானத்திலும், இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார்.
அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோணப் பண்டிகையின்போது, 10 நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
மேலும், ஓணம் பண்டிகையின்போது திருவாதிரைக் களி, கைக்கொட்டிக் களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக் களி போன்ற உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் மக்கள் இன்புறுவார்கள்.
சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும், உயர்வு, தாழ்வு உணர்வுகளுக்கு இடங்கொடாது ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் இவ்வோணத் திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.