அதிமுக ஆட்சி தொடர மக்கள் விருப்பம்.. எனக்கு பின்னாலும் அதிமுக சேவையாற்றும்: ஜெ. உருக்கம்
சென்னை: அதிமுக அரசு தொடர மக்கள் விரும்புவதாகவும், தனக்கு பின்னாலும், அதிமுக மக்கள் சேவையாற்றும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக பேசினார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு இன்று பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். பெரும்பாலும், தேர்தலை ஒட்டியதாக அவரது பேச்சு சாராம்சம் இருந்தது.
ஜெயலலிதா பேசியதாவது: அராசங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்ல வேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவைப்படும்.
36 நாள் வேண்டும்
அப்படியிருக்கும்போது, இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை வழங்க வேண்டும். 36 நாட்கள் இந்த அவையை கூட வேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.
மக்கள் இயக்கம்
அவற்றையெல்லாம் சுருக்கி, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆனால் நான் குறிப்பிட்ட விரும்புவது எனன் வென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுய நலமும் இல்லை. அ.தி.மு.க.தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்.
எனக்கு பின்னும்
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்.
திமுக சுயநலம்
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நஷ்டத்தில் இருந்த கோ--ஆப்டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வருகின்றன. தி.மு.க. அரசு மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டனர். மக்கள் நலன் என்ற போர்வையில் குடும்ப நலனையே அவர்கள் வளர்த்தனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம்.
தமிழர்களுக்காக
ஆனால் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசைப் பொறுத்த வரை எங்களது திட்டங்கள் அனைத்தும், தமிழக மக்கள் நலனுக்காகத்தான். தமிழர் வாழ்வும், தமிழர் வளமும் என்றென்றும் மங்காதுபுதுப் பொலிவுடன் திகழும் வண்ணம் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மாற்றம் வேண்டும்
கடந்த 2011ம் ஆண்டு (பொதுத்தேர்தலில்) தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டுமென உறுதியுடன் இருந்தார்கள். சட்டம் -ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும், இல்லாதோரின் நிலைஉயர வேண்டும், இருண்ட தமிழகம் ஒளிபெற வேண்டும், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப் பட்டோர், ஒதுக்கப் பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
மக்கள் விருப்பம்
அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வுஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத் தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவேதான் ‘தொடரட்டும் இந்த அரசு' என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள்.
மக்களுக்காக அரசு
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதைப் போலவே மக்களால் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு என்பதையும், சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மக்களால் இந்த அரசு மக்களுக்காகவே இந்த அரசு. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.