ஆந்திரா, தெலுங்கானாவுக்கு வரிச்சலுகை.. தமிழகப் பொருளாதாரம் பாதிக்கக்கூடாது: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: ஆந்திரா மற்றும் தெலுங்கானவுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம்:
ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம்-2014ன் படி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் பற்றி 14-வது திட்ட கமிஷனுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன. இந்த சட்டத்தின் 93 மற்றும் 94-வது பிரிவுகளில் இரு மாநிலங்களுக்கும் ஏராளமான நிதி மற்றும் பொருளாதார பயன்கள் பெற உறுதிமொழி அளிக்கப் பட்டுள்ளன.
அண்டை மாநிலம் என்ற முறையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தங்கள் பகுதி மேம்பாட்டுக்காக கேட்கும் சலுகைகள் பற்றி நாங்கள் எந்த அதிருப்தியும் சொல்ல இயலாது.
தமிழக நலனுக்கு கவலை
என்றாலும் 94-வது சட்ட பிரிவின் உட்பிரிவான (1)ல், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு வரிச்சலுகை, வரி உதவிகள் உள்ளிட்ட உரிய நிதி நட வடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்பட்டு இருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வரிச் சலுகை
ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் தொழில் வளர்ச்சிக்காக வரிச்சலுகைகள் அளிக்கப்படுவதை இந்த சட்டப்பிரிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வரிச் சலுகைகள் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது.
ஏன் தலையீடு
எனவே இந்த நேரத்தில் இந்த இரு மாநிலங்களின் அண்டை மாநிலம் என்ற முறையில் சில கருத்துக்களை தெரிவிப்பது பொருத்தமான தலையீடாக இருக்கும். வரி திருத்தங்களின் பொதுவான இலக்கு, பல்வேறு வரி விலக்குகளை எளிமைப் படுத்துவதாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
வாட் வரி
மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரி விகிதங்கள் விவகாரத்தில் சுமூக நிலையை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மாநிலங்களில் முந்தைய விற்பனை வரிக்கு பதில் வாட் வரி முறையை அறிமுகப்படுத்த வழி வகுத்தது.
வரி சீரமைப்பின் இயல்பு மாற்றம்
மத்திய அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வரி விலக்குகளை குறைக்கவும், முழுமையாக நீக்கவும் முயன்றது. 2003-ம் ஆண்டு இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களின் சில பகுதிகளில் புதிய தொழில் தொடங்குவதற்கு வருமான வரி மற்றும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்தது வரி சீரமைப்பின் இயல்பு நிலையில் இருந்து மாறிச் செல்வதாக அமைந்து விட்டது.
வரி விலக்கை திரும்பப் பெற வேண்டும்
2005-ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நான் இது தொடர்பாக விவாதித்து பேசினேன். மேலும் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, இத் தகைய வரி விலக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தேன்.
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் எல்லா மாநில முதல்வர்களும் மாநிலங்களில் முதலீட்டு சூழ் நிலையை பாதிக்கும் வரி விலக்கை நீக்க வேண்டும் என்று பேசினார்கள். ஒவ் வொரு பகுதிக்கும் ஏற்ப வரி விலக்கு அளிக்கும் திட்டம் ஏற்றதல்ல என்று தனியார் அமைப்புகள் நடத்திய ஆய் வுகளும் தெரிவித்தன.
ஆந்திரா, தெலுங்கானாவுக்கு இடமாற்றம்
இந்த நிலையில் பகுதி அடிப்படையில் வரி சலுகைகள் அளிப்பதை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு நீட்டிப்பு செய்தால் அது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பெரிய அள வில் முதலீடுகளை இடம் பெயரச் செய்தும், தொழிற் சாலைகள் இடம் மாறச் செய்வது உள்ளிட்ட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
சமச்சீரற்ற போட்டி
மேலும் இது அண்டை மாநிலங்களுக்கு இடையே சமச்சீர் இல்லாத போட்டிக்கான ஒரு முழுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். உண்மையில் புதிய தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள், அண்டை மாநிலங்களில் ஏற்கனவே உள்ள தொழிற் சாலைகளுக்கும் ஈடு கொடுத்து விட்டுக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது சமச்சீர் இல்லாத போட்டியை கொண்டு வந்து விடும். இந்த இடர்பாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.
பகுதி வாரி வரி
மாநிலங்களில் பகுதி வாரியாக அளிக்கப்படும் வரி விலக்குகள் உண்மையில் செலவு மிகுந்தது. கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட 2014-15-ம் ஆண் டுக்கானபட்ஜெட்டில், பகுதி அடிப்படையிலான வரிச் சலுகைகள் காரணமாக 2013-14-ல் மறைமுக வரி யாக ரூ.9267.5 கோடியும், சுங்க வரியாக ரூ.18 ஆயிரம் கோடியும் வந்ததாக குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்த வருவாயை மாநி லங்களுக்கு இடையே பங்கீட்டு கொள்ள முடியும். இதே மாதிரியான வரிச் சலுகைகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், அதனால் ஏற்படும் நிதி இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
வளர்ச்சியடைந்த மாநிலங்கள்
உண்மையில் பார்க்கப் போனால் ஆந்திரா பிரதேசம் மாநிலமும், தெலுங்கானா மாநிலமும் உள்கட்டமைப்புகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள மாநிலங்களாகும்.
அன்று வரிச்சலுகைகள் இல்லை
2000-ம் ஆண்டு பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களை பிரித்து ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் என்ற 2 புதிய மாநிலங்கள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களோ அல்லது புதிதாக தோன்றிய ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களோ எந்த வித வரிச் சலுகைகளும் பெற வில்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
சிறப்பு அந்தஸ்து பெற்ற உத்தர்காண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை அது, காஷ்மீர், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போல சிறப்பு மாநில அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனவே இவற்றுடன் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் ஒப்பிடக்கூடாது.
சிறப்பு வரிச்சலுகை அளிக்க கூடாது
அந்த மாநிலங்களை பட்டியலிட்டது போல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சிறப்பு அந் தஸ்து பட்டியலில் சேர்க்க முடியாது.எனவே ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்க ளுக்கு சிறப்பு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண் டும்.
இயற்கை பேரழிவில்...
இயற்கைப் பேரழிவு போன்றவற்றால் பாதிக்கப் படும்போது குறிப்பிட்ட காலத்துக்கு வரி விலக்குகள், வரிச் சலுகைகள் கொடுப் பதை நியாயமானது என்று ஏற்று கொள்ளலாம். 2001-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மிகப் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உண்டான போது அங்கு புதிய தொழில்கள் தொடங்குவதற்காக 3 ஆண் டுகளுக்கு முழுமையான வரி விலக்கு கொடுக்கப்பட்டது.
வரிச்சலுகை தராத மத்திய அரசு
என்றாலும் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழ் நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் சுங்க வரி வசூ லிப்பதை சிறிது நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது இந்த நியாயமான கோரிக்கையை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்று வரிச் சலுகைகள் எது வும் தரவில்லை.
எச்சரிக்கையாக அணுக வேண்டும்
ஆந்திர மாநில மறுசீர மைப்பு சட்டம் 2014-ன்படி இரு மாநிலங்களுக்கும் போதுமான அளவுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இரு மாநி லங்களிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரிலான பகுதி அடிப்படையிலான வரிச் சலுகைகள் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் எச்சரிக் கையுடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலம் விட்டு மாநிலம்
இத்தகைய பகுதி வாரியான வரிச் சலுகைகள் சமமான வரிக் கொள்கை மற்றும் அடிப்படை பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக அமைந்து விடும். வரி சலு கைகள், வரி விலக்குகளால் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி அளிக்கப் பட்ட மனித வளத்துடன் முதலீடுகள் ஒரு மாநிலத்தில் இருந்து, இன்னொரு மாநி லத்துக்கு மாறுவதை ஒழிக்க வேண்டும்.
திவாலான நிலை
பகுதி அடிப்படையிலான வரி விலக்குகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய போதும், முந்தைய காங்கிரஸ் அரசு, 2 முறை ஆட்சியில் இருந்த போது குறுகிய அரசியல் பார்வையுடன் அரசியல் ஆதாயம் பெறும் வகையில் நடந்து கொண்டது. நிதி சீர்திருத்தங்கள் செய்வதாக முந்தைய அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்தது. இதுதான் முந்தைய ஆட்சிக் காலத்தில் திவாலான ஒரு நிலையை ஏற்படுத்தியது.
பொருளாதாரத்தை உருக்குலைக்கக் கூடாது
எனவே இந்த விவகாரத்தை அணுகும் முறையில், உங்கள் தலைமையிலான அரசு மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தை ஊக் கப்படுத்துவதை உருக்குலைய செய்யும் வகையில் எதையும் செய்யக்கூடாது.
தவறான அறிவுரை
இடத்துக்கு ஏற்ப வரி விலக்கு கொடுப்பது என்பது மிகவும் தவறான அறி வுரையாகும். எனவே இதன் அடிப்படையில் தமிழகம் அண்டை மாநிலங்களுடன் மாறுபடும் நிலையை ஏற் படுத்தக்கூடாது.
உறுதி செய்ய வேண்டும்
இந்த பிரச்சினையில் நீங்கள் நிச்சயமாக அனைத்து கோணங்களிலும் பரிசீலனை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் இதில் இறுதி முடிவு எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கப் படாத வகையில் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் கூறியுள்ளார்.