எத்தனை திருப்பங்கள், எத்தனை இழுபறிகள்.. ஜெ. வழக்கு; ஒரு மீள் பார்வை!
சென்னை: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க இது நல்ல நேரம் என்பதால் இந்த பதிவு. வழக்கின் போக்கை எளிதாக புரிந்துகொள்ள இந்த டைம்லைன் உதவும்.
1996: அப்போதைய ஜனதா கட்சிதலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை தாக்கல் செய்தார். 1991-96க்கு இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக புகார்.
1996 டிச.7: ஜெயலலிதா கைதானார்.
1997: சென்னை கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.
1997, ஜூன் 4: லஞ்ச தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்.
1997, அக்.1: தன்மீதான வழக்கிற்கு அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி அனுமதி கொடுத்தது தவறு என ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை மெட்ராஸ் ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.விசாரணை தொடர்ந்து நடந்தது. 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 250 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். 10 சாட்சியங்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
2001 மே: சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். டான்சி ஊழல் வழக்கில் பெற்ற தண்டனையை தொடர்ந்து அவரது பதவியை பறித்தது உச்சநீதிமன்றம்.
2001, செப்.21: தண்டனையில் இருந்து தப்பியதும் ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2002, பிப்ரவரி 21ம்தேதி மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த காலகட்டத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் பல சாட்சியங்கள் ஏனோ திடீரென பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தனர். அரசு வக்கீல்கள் மூவர் ராஜினாமா செய்தனர்.
2003: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்தில் வழக்கு நடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதன்பேரில் கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம்.
2003, நவம்பர் 18: கர்நாடக சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம்.
2005 பிப்ரவரி 19: சொத்துக்குவிப்பு வழக்கில் பி.வி.ஆச்சாரியா என்ற மூத்த வழக்கறிஞரை அரசு வக்கீலாக நியமித்தது கர்நாடக அரசு.
2011 அக்டோபர் மற்றும் நவம்பர்: பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதி கேட்ட 1339 கேள்விகளுக்கு பதிலளித்தார்.
2012 ஆக.12: அரசு வக்கீலாக பணியாற்ற தனக்கு நெருக்கடி தரப்படுவதாக ஆச்சாரியா கூறி பதவியை ராஜினாமா செய்தார்.
2013, பிப்ரவரி 2: கர்நாடக அரசு பவானிசிங் என்ற வக்கீலை அரசு தரப்பாக நியமித்தது.
2013 ஆக.26: பவானிசிங்கை சிறப்பு அரசு வக்கீலாக நியமித்ததை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.
2013 செப்.30: கர்நாடக அரசின் உத்தரவை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2014, மார்ச்: வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து குற்றவாளிகள் தரப்புக்கு உதவி செய்ததாக அரசு வக்கீல் பவானிசிங்கிற்கு அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம்.
2014, மார்ச் 18: சிறப்பு நீதிமன்ற நீதிபதி போட்ட அபராதத்தை ரத்து செய்ய பவானிசிங் ஹைகோர்ட்டை நாடினார். ஆனால் மார்ச் 21ம்தேதி இந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
2014 ஆகஸ்ட் 28: செப்டம்பர் 20ம்தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி. அதன்பிறகு ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று பரப்பன அக்ரஹாராவுக்கு கோர்ட்டை மாற்ற வேண்டியிருந்ததால் தீர்ப்பு தேதி 27க்கு ஒத்திப்போனது.
2014, செப்டம்பர் 27: ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2014 செப்டம்பர் 29: ஜாமீன் கேட்டு ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
2014 செப்டம்பர் 30: ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அக்டோபர் 1ம்தேதி விசாரிப்பதாக அறிவித்தது.
2014 அக்டோபர் 1: ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு பெஞ்ச் விசாரித்தது.
2014, அக்டோபர் 2: கர்நாடக சிறப்பு நீதிபதி, 7ம்தேதி ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என ஒத்திவைத்தார்.
2014, அக்டோபர் 7: கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர மறுத்தது.
2014, அக்டோபர் 9: ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.
2014, அக்டோபர் 17: ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.