வெள்ளம் குறித்த ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் உரை: கருத்துக்கணிப்பில் பெரும் அதிருப்தி!
சென்னை: வெள்ள பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலமாக பேசிய உரைக்கு மக்கள் மத்தியில் கோபம் அதிகரிக்கவே செய்யும் என்பது 'ஒன்இந்தியா தமிழ்' தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் தெரியவருகிறது.
தமிழக வெள்ள சேத தடுப்பில், தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கு எழுந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி நீரை இரவில், மொத்தமாக திறந்துவிட்டதுதான் சென்னையின் பெரு வெள்ளத்திற்கு காரணம் என்று சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
நெருக்கடி அதிகரித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, வாட்ஸ்அப் மூலமாக, மக்களுக்கு நேரடியாக உரையாற்றிய ஆடியோ மெசேஜ் கடந்த வாரம் வெளியானது.
யாருமே இல்லங்க
அந்த ஆடியோ மெசேஜில் ஜெயலலிதா மிகுந்த உருக்கமாக பேசியிருந்தார். எனக்கென்று யாருமேயில்லை, தமிழக மக்கள்தான் எனக்கு எல்லாம் என்றெல்லாம் மிகவும் சென்டிமென்ட்டாக பேசியிருந்தார் ஜெயலலிதா.
வாட்ஸ்அப்பில் வடை
அதேநேரம், வாட்ஸ்அப்பில் வடை சுட்டுள்ளதாக ஸ்டாலினும், ஊர் எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன்போல ஜெயலலிதா செயல்படுவதாக கருணாநிதியும் விமர்சனம் செய்திருந்தனர்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அரசு, உருக்கமாக பேசிக்கொண்டிருப்பது சரியான நடைமுறையில்லை என்றும் பல அரசியல் தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
சர்ச்சில் பேச்சுக்கு இணை
அதேநேரம், அதிமுக பத்திரிகையோ, சர்ச்சில் பேச்சுக்கு இணையானது ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் உரை என்று புகழாரம் சூட்டியிருந்தது. எனவே, வாட்ஸ்அப் உரை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம், தனது தளத்தில் வாக்கெடுப்பை நடத்தியது.
வாக்கெடுப்பு
ஜெயலலிதாவின் ஆடியோ மெசேஜ் மூலம் வெள்ளம் விவகாரத்தில் அவர் மீதான மக்களின் கோபம் குறையுமா? என்று கேள்வி கேட்கப்பட்டு, குறையாது, குறையும், இன்னும் கூடும் என்று 3 ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன.
இன்னும் கூடுமாம்
இந்த வாக்கெடுப்பை 11 லட்சம் வாசகர்கள் பார்த்துள்ளனர். அதில் 47,300 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் அடிப்படையில், குறையாது என்று கூறியவர்கள் 29 சதவீதமும், குறையும் என்று கூறியவர்கள் 26 சதவீதமும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இன்னும் கூடும் என்று 45 சதவீதம்பேர் வாக்களித்துள்ளனர்.
முக்கால்வாசி பேர் அதிருப்தி
குறையாது என்ற 29 சதவீதத்தையும், இன்னும் கூடும் என்று வாக்களித்த 45 சதவீதத்தினருடன் கூட்டிக்கொண்டால், ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் மெசேஜ் 74 சதவீத வாசகர்களுக்கு அதிருப்தியே தந்துள்ளது என்பது உறுதியாகிறது. 26 சதவீதம் பேர் மட்டுமே வாட்ஸ்அப் மெசேஜால் கவரப்பட்டுள்ளனர்.