ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் முழு அடைப்பு!! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
புதுவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதுமே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுவையில் கடந்த ஒரு வாரகாலமாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு அதிமுகவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பைத் தொடர்ந்து இன்று புதுச்சேரி, காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
சாலைகளில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டன. உணவு விடுதிகள் மூடப்பட்டன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
அதிருப்தி புருஷோத்தமன் மறியல்
இதனிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் தமக்கு தெரியாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது என்று புலம்பிய புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன், முழு அடைப்புக்கு ஆதரவாக தனது ஆதரவாளர்களுடன் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.
எம்.எல்.ஏக்கள் மறியல் - கைது
பின்னர் முழு அடைப்பை அறிவித்த அதிமுக 4 எம்.எல்.ஏக்கள் தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த 4 எம்.எல்.ஏக்கள் மற்றும் 200 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications