ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு ஜூன் 6 வரை சுப்ரீம் கோர்ட் தடை
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞர் இறுதிவாதத்தை நிறைவு செய்துவிட்டார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் எழுத்துப்பூர்வமாக வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தரப்பில் ஜூன் 2ம் தேதி இறுதிவாதம் தொடங்க உள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினரின் இறுதிவாதம் தினசரி நடைபெறவேண்டும் என்று சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சொத்து லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்து இருந்தார்.

இடைக்காலத்தடை
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜுன் 6ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மற்றவர்களுக்கு தடையில்லை
அதேசமயம் சொத்து குவிப்பு வழக்கில் மற்றவர்களின் வழக்கை விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முன்னதாக, இந்த வழக்கிற்கு தடை கோரிய ஜெயலலிதாவின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக தொடரும் வழக்கு
ஜெயலலிதா 1991 -1996ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக நடைபெறும் வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications