ஜெ. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை… ஸ்டாலின் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. கொலை, கொள்ளை பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, களியக்காவிளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாலை 3.45 மணி அளவில் வந்த அவர், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அப்போது அவர், பேசியதாவது:
"தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஜெயலலிதா வந்த பிறகு அந்த ஒப்பந்தம் போடப்படவே இல்லை. இன்று விலைவாசி விஷம் போல் உயர்ந்து கொண்டிருக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம், நம் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், மின்சார கட்டணம் நம்மை வேதனைப்பட வைக்கிறது.
விலைவாசி உயர்வு
இன்று ஒருவர் மளிகை கடைக்கு சென்று நினைத்த பொருட்களை வாங்க முடியுமா? தி.மு.க. ஆட்சியில் பொன்னி அரிசி 40 ரூபாய். இன்று 50 ரூபாய், சாதா அரிசி ரூ.20க்கு இருந்தது ரூ.36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50ரூபாயாக இருந்த வத்தல், மிளகு இன்று 100 ரூபாயாகி இருக்கிறது. ரூ. 45க்கு விற்பனையான மல்லி தற்போது 110 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இன்னும் 1 உயர்த்தினால், தமிழக மக்களுக்கு நாமம் போட்டு விடுவார்கள். அதேபோல், பருப்பு 50 ரூபாயிலிருந்து, 95 ரூபாயாகவும், துவரம் பருப்பு 55 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், பாமாயில் 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் எண்ணெய் 60லிருந்து 145ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை கற்பழிப்பு என்று மக்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா முன்னுக்குப்பின் முரணான நிலையை கொண்டிருக்கிறார் என்று கூறிய ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் ஆட்சிக்கு வரும்முன் சேது சமுத்திரத் திட்டம் தேவை என்ற ஜெயலலிதா, பின்னர் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "சேது சமுத்திர திட்டத்திற்கான அடிக்கால் நாட்டு விழா, மதுரையில் நடந்தது. பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார். ராமதாஸ், வைகோ உள்ளிட்ட பலரும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.
தலைவர் கலைஞர்தான் அந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த பணி அ.தி.மு.க.வால் திட்டமிட்டு, சதி செய்து நீதிமன்றத்திற்கு சென்று தடை போட்டார்கள். முதல்வராக இருக்கக்கூடிய அம்மையார் ஜெயலலிதா மனு போடும்போது, தமிழ்நாட்டிற்கு சேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்பதைதான் தெரிவித்திருக்கிறார்" என ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசில் இருந்த தி.மு.க. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதும், தமிழர்களுக்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை என ஜெயலலிதா கூறுவதும் தவறு என்றார் ஸ்டாலின்.