69வது சுதந்திர தினம்... கோட்டையில் கொடி ஏற்றுகிறார் முதல்வர் ஜெயலலிதா!
சென்னை: இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா 15-ந் தேதி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார்.
தமிழக அரசின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 15-ந் தேதியன்று அங்கு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டு காலை 9 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் இந்த ஆண்டு கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 15-ந் தேதி காலை 8.50 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றுகிறார். மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகு கொடியேற்றும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்தர தின விழாவில் பங்கேற்பதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து 15-ந் தேதி காலை காரில் புறப்படும் அவர், போர் நினைவுச் சின்னத்துக்கு வருவார். அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ ஜெயலலிதாவை ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் வரவேற்பார்.
பின்னர் தலைமை முப்படை அதிகாரிகள், காவல் உயரதிகாரிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு வருவார் முதல்வர் ஜெயலலிதா. அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்வார்.
பின்னர் அவர் திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அவருடன் அணிவகுப்பு தலைவர் உடன் செல்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு ஜெயலலிதா சென்று, 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்துவார்.
முக்கிய அறிவிப்புகள்
அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன் பின்னர் சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிகழ்த்துவார். இந்த உரையில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
அதைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் அருகே குழந்தைகளுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குவார்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் விருதுகளுக்கான நபர்களையும் அரசு தேர்வு செய்து வருகிறது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், புதிய அறிவிப்புகள் மற்றும் விருதுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் கலந்துகொண்டனர்.