தீபா மற்றும் என் பெயரில்தான் மொத்த ஜெ. சொத்தும் உள்ளது.. உயில் என்னிடமே உள்ளது.. தீபக் புது தகவல்
என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அத்தனை சொத்துக்களும் தனக்கும், தனது சகோதரி தீபாவிற்குத்தான் சொந்தம் என்று அவரது அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். அத்தை எழுதிய உயில் தன்னிடம்தான் உள்ளது என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்குச் சொந்தம் என்று ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தீபக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சிதறிய அதிமுக
அதிமுக பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை தொடங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் கணவர் மாதவன் தனி கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.
அண்ணன் தீபக்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இறுதிச்சடங்குகள் செய்த தீபக் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். பிளவு பட்ட அதிமுகவில் சசிகலா அணிக்குத்தான் ஆதரவு என்று தீபக் கூறினார்
தினகரனுக்கு எதிர்ப்பு
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார் தீபக். பின்னர் பன்னீர்செல்வம், சசிகலாவின் அணியில் இணைய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உயில் பற்றி தற்போது தீபக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்கள்
என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் தற்போது என்னிடம்தான் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துகளும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.
எங்களுக்கே சொந்தம்
சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துகள் எனக்குச் சொந்தம் என்று அவர் தெரிவித்துள்ளார். நிஜமாவா தீபக்.
எல்லாமே மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்தில் தொடங்கி கொடநாடு காவலாளி கொலை, விஜயபாஸ்கர் நண்பர் மரணம் வரை எல்லாமே மர்மமாக உள்ளது. இந்த நிலையில் தீபக், திடீரென உயில் பற்றி பேசி பரபரப்பை கிளப்பியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.