ராஜபக்சே உடன் பிரதமர் கைகுலுக்கலாமா?- நாகை பிரச்சாரத்தில் ஜெ. பேச்சு
நாகப்பட்டினம்: மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமையவிடாமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளரை ஆதரித்து மூன்றாவது நாளாக நாகையில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். அதிமுக கூட்டணியில் இந்தமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாகை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் கே.கோபாலை ஆதரித்து அவுரித்திடலில் ஜெயலலிதா பேசியதாவது:

பாதுகாப்பற்ற பாதுகாப்புத்துறை
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக எழுச்சியுடன் மக்கள் கூடியுள்ளனர். லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். இந்தியாவை பாதுகாக்க நமது பாதுகாப்புத்துறை வலுவானதாக இருக்க வேண்டும். முப்படைகளின் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. பாதுகாப்புத்துறையே பாதுகாப்பாற்றதாக ஆக்கிவிட்டது மத்திய அரசு.

மீத்தேன் வாயு
காவிரி டெல்டா படுகையில் வில் மீத்தேன் வாயு எடுக்க 2010ல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. விவசாயிகளின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கியது. மீத்தேன் வாயு திட்டத்திற்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவிலலை.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதிப்பது வேதனையானது. மரபணு மாற்றப்பட்ட அரசி, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

மரபணு மாற்ற விதைகள்
உணவு தானிய உற்பத்தி ஒரு சில தனியார் நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகிவிடும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பரிசோதிக்க தமிழக அரசு அனுமதி வழங்காது. அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைந்தால் மரபணு மாற்ற விதைகள் அனுமதிக்கப்படாது.

மீனவர்களுக்கு பாதுகாப்பில்லை
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், சிறைபிடிப்புக்கு மீனவர்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள். இலங்கையில் நடைபெறும் மீனவர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவேண்டும். இப்பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

பதில் சொல்லாத பிரதமர்
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் மூலம் அச்சுறுத்தல் இருக்கிறது. மீனவர்கள் விடுதலை தொடர்பாக பிரதமருக்கு பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டது. எனது கடிதங்களுக்கு பிரதமர் எந்த பதிலும் அனுப்பவில்லை.

ராஜபக்சே உடன் கைகுலுக்கலாமா?
வியட்நாமில் இலங்கை அதிபருடன், இந்திய பிரதமர் கைகுலுக்கியுள்ளார். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இலங்கை அதிபருடன் கைகுலுக்குகிறார் பிரதமர். இப்படிப்பட்ட ஒரு பிரதமர் தேவைதானா? இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவைதானா?

கச்சத்தீவை மீட்போம்
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை தூக்கியெறிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க கச்சத்தீவை மீட்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. கச்சத்தீவு பகுதியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.












Click it and Unblock the Notifications