அரசு கேபிளுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை வழங்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: 'அரசு கேபிள் டிவி' நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமையை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக கடந்த ஆட்சியில் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
2011ம் ஆண்டு செப்ட்ம்பர் 2ம்தேதி முதல் தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில், 31 மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. சேவைகளை வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணமாக 70 ரூபாய்க்கு 100 டி.வி. சானல்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வழங்கி வருகிறது.
அரசு கேபிள் டி.வி.க்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 24 ஆயிரம் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் 65 லட்சம் சந்தாதாரர்களை இந்த சேனல் சென்று சேருகிறது.
இதன்மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய எம்.எஸ்.ஓ. என்ற சிறப்பை தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையால் ரூ.150 முதல் ரூ.250 வரை பெற்றுக் கொண்டு வெறும் 30-70 சானல்களை மட்டுமே வழங்கி வந்த எம்.எஸ்.ஓ.க்களின் பிடியில் இருந்து மக்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விடுவித்துள்ளது.
கடந்த 2-4-2008 அன்று மத்திய அரசு, சென்னை மாநகருக்கும், கேபிள் டி.வி. சேனல் வழங்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்து 'காஸ் லைசென்ஸ்' அனுமதியை வழங்கியது. இதன் மூலம் சென்னை மாநகர மக்களும் அரசு கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் 'கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டம் 1995' திருத்தப்பட்டது. இதனால் காஸ் பகுதி, டாஸ் (டிஜிட்டல் அட்ரசபிள் சிஸ்டம்) என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகரில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காட்டுவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியது.
மேலும், சென்னை மாநகரில் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறுவதற்கான உரிமம் அனுமதி கேட்டு 5-7-2012 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறையிடம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முறைப்படி விண்ணப்பித்தது. அது போல தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் இந்த டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கேட்டு 23-11-2012 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.
டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்கும் ஏற்பாட்டுக்காக செட்டாப் பாக்ஸ், காஸ், சந்தா நிர்வாக முறை போன்றவை ரூ.50 கோடி செலவில் தொடங்கப்பட்டன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் விண்ணப்பம் மட்டும் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்த பிறகு கடிதம் 9 எம்.எஸ்.ஓ.க்களுக்கு உடனே மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து, எனது உத்தரவின் பேரில் தமிழக எம்.பி.க்கள் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரை மீண்டும், மீண்டும் சந்தித்து உரிமம் வழங்க வலியுறுத்தினார்கள். பிரதமரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பிட்ட காலத்துக்குள், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உரிமம் வழங்க தொடர்ந்து கேட்டுக் கொண்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து தாமதம் செய்தது. இதனால் மற்ற எம்.எஸ். ஓ.க்கள் சந்தையில் முன்னிலைபெறும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உரிமம் வழங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை 6-12-2012 அன்று உத்தரவிட்டது. நானும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி டாஸ் (டி.எ.எஸ்.) உரிமம் தர கேட்டேன்.
இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறுவதற்கான டி.ஏ.எஸ். உரிமம் இதுவரை வழங்கப்படவில்லை.
கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டம் 1995ன்படி ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது கம்பெனி சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் டி.ஏ.எஸ். உரிமம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இந்த உரிமத்தை பெறுவதற்கு முழுமையான தகுதி பெற்ற நிறுவனமாகும்.
எனவே முந்தைய காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டி.ஏ.எஸ். உரிமத்தை வழங்காததில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். சில குறிப்பிட்ட தனியார்களின் தொழில் வளர வேண்டும் என்பதற்காக முந்தைய காங்கிரஸ் அரசு உரிமம் வழங்கவில்லை என்று கருதுகிறேன்.
எனவே விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு இனியும் காலதாமதம் செய்யாமல் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கான ஒப்புதல் தரும் டி.ஏ.எஸ். (டாஸ்) உரிமம் தர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் தரும் உரிமம், தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் குறைந்த செலவில் தரமுள்ள கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.