சோடா பாட்டில் வீச்சு பேச்சு.. ஆண்டாளிடம் திடீரென மன்னிப்பு கேட்ட ஜீயர்!
சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சுக்கு தான் ஆண்டாள் நாச்சியாரிடம் மன்னிப்பு கோரியதாக ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்துக்களின் மத நம்பிக்கையை குறித்து யார் தவறாக பேசினாலும் பொறுத்து கொள்ளமாட்டோம் என்றும் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் பேசியதற்கு சடகோப ராமானுஜ ஜீயர் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் குறித்த பெருமைகளை பேசினார்.
அப்போது வெளிநாட்டவர் ஆண்டாள் குறித்து எழுதிய கருத்தை மேற்கோள் காட்டினார். அது ஆரம்ப காலத்தில் நல்ல நடைமுறையாக இருந்தாலும் பிற்காலத்தில் தவறான அர்த்தம் கொடுத்ததால் அந்த வார்த்தையை பயன்படுத்திய வைரமுத்துவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஜீயர் போராட்டம்
இதையடுத்து இந்து அமைப்புகள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜரும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வைரமுத்து நேரில் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்ணாவிரதம் கைவிடப்படும் என்றார் ஜீயர். எனினும் ஜீயர் வைரமுத்துவுக்கு கெடு விதித்துவிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
விளக்கம் அளித்த வைரமுத்து
இந்நிலையில் தான் கூறியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய வைரமுத்து, தான் எந்த அர்த்தத்தில் ஆண்டாளை அவ்வாறு கூறினேன் என்பதையும் விளக்கமாக தெரிவித்துவிட்டார். எனினும் இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி உருவபொம்மையை எரித்தன.
ஜீயர் உண்ணாவிரதம்
ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவர் பிப்ரவரி 3-க்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் கோரியுள்ளார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன கூட்டம் ஒன்றை ஜீயர் நடத்தினார்.
கல்லெறியத் தெரியும்
அப்போது அவர் பேசுகையில் இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். கல்லெறிய தெரியும் என்று ஜீயர் பேசியிருந்தார். இது ஆன்மிக பெரியவரான ஜீயர் இப்படி பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜீயர் மன்னிப்பு
சோடா பாட்டில் பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து அவர் கூறுகையில் சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சு இந்து மக்களின் மனம் புண்படும் என்று கருதியதால் மன்னிப்பு கோரினேன். ஆண்டாள் நாச்சியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரினேன் என்றார் ஜீயர்.