டிரம்பே வியந்த! பத்மஸ்ரீ விருது பெற்ற! தமிழக பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை!
செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்றைய தினம் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் விலங்குகள் நல பிரிவில் இந்த விருதைப் பெற்றார்கள்.

இவர்கள் இருவருமே அபாயகரமான அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள். உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு நாடுகளில் இருந்து விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர். இந்த நிலையில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்கராசு ஆகியோருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வண்டலூர் அருகேவுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தோட்ட பராமரிப்பாளர், இரவு காவலர் பணிக்கான ஆணைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை ஆட்சியர் சினேகா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இரு பாம்பு பிடி வீரர்களுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் இருந்த போது அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை என இருந்தது. ஆனால் பாம்பு பிடி வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் ஆகியோர் சென்றனர்.
அதாவது அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தில் அதிக மலைப்பாம்புகள் வாழும் பகுதி. இவை 2017ஆம் ஆண்டு மான், முயல்கள் உள்ளிட்ட விலங்குகளை விழுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். அப்போது அமெரிக்காவின் பாம்பு பிடி வல்லுநர்களைக் கொண்டு அந்த பாம்புகள் பிடிபட்டன. ஆனாலும் அவற்றின் தொல்லை அதிகரித்தது. இதனால் உலகெங்கும் இருக்கும் பாம்புபிடி வீரர்களைக் கண்டறிய புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தனித் திட்டம் வகுத்தது.

அப்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்த மாசி சடையனும் வடிவேலும் அங்கு சென்று பாம்பு பிடித்தனர். இதற்காக இந்திய மதிப்பில் 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இவர்கள் இருவரும் 2 மாதம் வரை தங்கியிருந்து 33 மலைப்பாம்புகளை பிடித்தனர். ஒவ்வொரு பாம்பின் எடை 75 கிலோவாகும்.
அமெரிக்காவின் செய்தி நிறுவனமான மியாமி ஹெரால்டு உலகின் சிறந்த பாம்பு பிடிப்பாளர்கள் என புகழாரம் சூட்டியது. அது போல் இவர்கள் இருவரும் அமெரிக்கா மட்டுமில்லாமல் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பாம்பு பிடித்தனர்.












Click it and Unblock the Notifications