கச்சத்தீவு விவகாரத்தில் கட்சிபேதமின்றி தமிழர்கள் ஒன்றுகூடுங்கள்: கி.வீரமணி
சென்னை: தமிழக மீனவர் பிரச்னையில் காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாட்டையே அட்சரம் பிறழாமல் பா.ஜ.க. ஆட்சியும் பின்பற்றுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
கச்சதீவினை மீட்க தமிழகர்கள் கட்சி பேதங்களை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லுவதும், சிறைப் பிடிப்பதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. எனவே, கச்சத்தீவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளர் விஸ்வேஷ் நீகி அளித்த பதில் மனுவில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட கடல் பகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த 1974ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1974 ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 6ன்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு உரிமையில்லை. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது.
கச்சத்தீவை பார்வையிடுவதற்கும், கச்சத்தீவில் உள்ள செயின்ட் ஆண்டனி கிறித்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கையிடம் பயணம் தொடர்பாக அனுமதி பெற வேண்டியதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளின் வெளியுறவுத் துறைக்கு இடையேயான 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, இரு நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் எதிர் நாட்டு மீனவர்களின் படகு மற்றும் மீனவர்கள் செல்லக் கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மனுவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்தகால காங்கிரஸ் ஆட்சி தமிழக மீனவர் பிரச்னையில் எந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ, அதில் அட்சரம் பிறழாமல் இன்றைய பா.ஜ.க. ஆட்சியும் ‘ஏறுநடை'ப் போடுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற விழாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் நரேந்திரமோடியும் விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படப் போகிறது என்றெல்லாம் அது குறித்துச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், நடந்தது என்ன? ‘‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்'' என்கிற பாணியிலே அல்லவா அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. இது கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில்கூட நடைபெறாத ஒன்று.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் பா.ஜ.க. ஆட்சிக்கும், காங்கிரஸ் ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லாத நிலையில், கச்சத்தீவை மீட்பது ஒன்றே நிரந்தரப் பரிகாரமாக இருக்க முடியும் என்றாலும், இதற்கிடையில் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைபிடிக்கப்படும் கொடுமைக்கு மத்திய அரசு முடிவு கட்டவில்லையானால், தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்து எழவேண்டிய தருணம் இதுவே. கட்சிகளை மறந்து தமிழர்கள் ஒன்றுபடவேண்டும். திராவிடர் கழகம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்'' எனக் கூறியுள்ளார்.