கச்சத்தீவு திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து இன்று 80 பக்தர்கள் படகில் பயணம்
புனித அந்தோனியார் தேவாலயம் திருவிழாவில் பங்கேற்க 80 பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு சென்றுள்ளனர்.
கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதன்படி, அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்படவுள்ளது. அதன் பின்னர்,சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து,நாளை காலை 7 மணிக்கு திருப்பலி நடைபெற்ற பின்னர் 9 மணியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு,திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு சென்றனர்.

3 விசைப்படகுகள்,ஒரு நாட்டுப் படகில் இன்று காலை 9 மணிக்கு 80 பேரும் உரிய பாதுகாப்புடன் கச்சத்தீவு பயணம் மேற்கொண்டனர். இந்த திருவிழாவுக்கு இடையே கச்சத்தீவில் இன்று இரவு தமிழக -இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,பாக் நீரிணை பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனையின்றி மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. தொடக்கத்தில் இந்த ஆண்டு தமிழக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழக மற்றும் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications