கருப்பாநதி அணையில் அரைகுறை சீரமைப்பு பணி- பழுதான மதகால் வீணாகும் தண்ணீர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி அணையில் பழுதான மதகு சரியாக சீரமைக்கப்படாத காரணத்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கருப்பா நதி அணை அமைந்துள்ளது. இதன் முழு கொள்ளளவு 72 அடியாகும். இந்த அணை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடையநல்லூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.
தற்போது தென்மேற்ரகு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைப்பகுதியில் சுமார் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. அணைப்பகுதிக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இப்படி வரும் மழை நீர் அணையில் தேங்காமல் பெருங்கால் பாசன மதகு வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில்தான் இந்த மதகு சரி செய்யப்பட்டது. ஆனால் மற்ற எந்த பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் பழுது நீக்கப்பட்ட மதகு வழியாக மதகுகள் அடைக்கப்பட்டிருந்தும் தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது.
அதிகாரிகள் தொடர் மெத்தனத்தால் டெண்டர் விடப்பட்ட பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாததாலும் குடிநீருக்கு மட்டுமின்றி விவசாயத்திற்கு கூட அணையில் மழை நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்து வருகின்றனர்.