மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பிரியாவிடை - தமிழகத்தில் அனைத்து துறைகளும் விடுமுறை!
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பால் விற்பனை நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொது விடுமுறையை அறிவித்துள்ளனர்.
கடந்த 27ம் தேதியன்று மேகாலயா ஐஐஎம் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்கள் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கில் உள்ள பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம் அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து அவருடைய உடல் ஷில்லாங்கிலிருந்து அசாமின் கவுகாத்திக்கு கொண்டு வரப்பட்டது. மூவர்ணக் கொடி மரியாதையுடன், ராணுவ வீரர்களின் குண்டு முழக்கத்துடன் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு ராணுவ விமானம் மூலமாக செவ்வாயன்று வந்தடைந்தது. அங்கு முப்படை தளபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள் மூலமாக அவரது இல்லம் அமைந்துள்ள ராஜாஜி மார்க் பகுதிக்கு கலாமின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், இரங்கல் புத்தகத்திலும் தங்களது இரங்கல் குறிப்பினை பதிவு செய்தனர். பின்னர் பொதுமக்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்பு, நேற்று காலை தனி ராணுவ விமானம் மூலமாக பாலம் விமான நிலையத்திலிருந்து முழு பாதுகாப்புடன் புறப்பட்ட அப்துல் கலாமின் உடல் நண்பகலில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரம் பஸ் நிலையப் பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகத் தலைவர்கள், பிரமுகர்கள் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் அமர்ந்திருந்து கலாம் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.
நேற்று மாலை பொதுமக்கள் அஞ்சலிக்கு அடுத்து அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கலாமின் உடலுக்கு, இன்று காலை அவருடைய குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பள்ளிவாசலில் கலாமின் உடலுக்கு சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமேஸ்வரம், பேய்க்கரும்பு கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அரசு இடத்தில் அவருடைய உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைக் குடியரசுத் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, எடியூரப்பா உட்பட பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மக்கள் ஜனாதிபதியாக விளங்கிய அப்துல் கலாமின் மறைவையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள், வங்கிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு, பால் நிறுவனங்கள், டாஸ்மாக் உட்பட தமிழகமே அவருடைய இறுதிச் சடங்கிற்காக தங்களுடைய அனைத்து பணிகளுக்கும் விடுமுறை அளித்து அஞ்சலி செலுத்தி வருகின்றது.
மேலும், ராமேஸ்வரம் மீனவர்களும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியின் படகு சேவையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கிற்காக மதியம் வரை பெட்ரோல் பங்குகள், நகை விற்பனை நிலையங்களும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளத் தலைவர்கள் வருகை:
அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அஞ்சலி:
கலாமின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, தொழுகைக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.