கமல்ஹாசன் ரசிகர்களின் நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளுக்கு... அதிகாரிகள் அனுமதி மறுப்பு
சென்னை: கமல்ஹாசன் ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றிற்கு கடலூர் நகராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சீரமைக்கத் தேவையான ஏற்பாடுகளையும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசனின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ரசிகர்கள் ஒன்றிணைந்து கடலூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த முன்வந்தனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. உதவிகளைப் பெற ஏராளமான பொதுமக்கள் வந்து காத்திருந்த நிலையில் அங்கே வந்த நகராட்சி அதிகாரிகள் இங்கே வைத்து இந்த நிகழ்சிகளை நடத்தக் கூடாது.
நாங்கள் நீங்கள் அனுப்பிய அனுமதிக் கடிதத்தை பரிசீலனை செய்வதாகத் தான் கூறினோம். ஆனால் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர்.
இதனைக் கேட்டு கமல்ஹாசன் மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் நகராட்சிப் பள்ளியில் வைத்து உதவிகளை வழங்கக் கூடாது.
ஆனால் நீங்கள் ஏதேனும் தனியார் மண்டபங்களில் வைத்து நடத்தலாம் என்று அதிகாரிகள் யோசனை கூற, இதில் சமாதானம் அடைந்த ரசிகர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி, மருத்துவ முகாமையும் நடத்தினர்.
இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications