சினிமா மூலம் ‘அகிம்சை’யை பரப்புங்கள்... கமலிடம் அறிவுறுத்திய தலாய் லாமா
சென்னை: சினிமா கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என புத்த மதத் தலைவர் தலாய் லாமா தன்னிடம் அறிவுறுத்தியதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் ‘அப்துல் கலாம் சேவா ரத்னா விருதுகள்-2015' வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்த அவரை நடிகர் கமல், கவுதமியுடன் நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தலாய் லாமாவுடன் சந்திப்பு...
இன்று (நேற்று) காலை தலாய் லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணக்கத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை.
உற்சாகம்...
காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதும், இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.
சினிமாவில் ஈடுபாடில்லை...
எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. 'நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை' என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
சினிமா மூலம் அகிம்சை...
ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்
என் நம்பிக்கை...
அகிம்சையின் பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர் கவிதையை ஞாபகப்படுத்தியது. யாதும் ஊரே யாவரும் கேளிர்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.