குவிந்த தொண்டர்கள்.. கோவை உட்பட 3 மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்.. தமிழகத்தை மாற்ற அழைப்பு
Recommended Video

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர், கமல்ஹாசன் இன்றும் நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 21ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அதை ஆரம்பித்தார். வழிநெடுக பொது மக்களை சந்தித்தார்.
இதையடுத்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்திய கட்சியின் பெயரை, மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.

இரு நாள் சுற்றுப் பயணம்
மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் கமல் விழா நடத்தினார். திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் பைக்கில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண் உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அப்போது கமல்ஹாசன் அறிவித்தார். இந்த நிலையில், கமல்ஹாசன் இன்றும், நாளையும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார்.

உற்சாக வரவேற்பு
கோவை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து, காரில், தொண்டர்கள் புடை சூழ, அவிநாசி புறப்பட்டார். பிற்பகல் அவினாசி சென்ற கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

இறங்கி வேலை செய்ய வேண்டும்
காரில் இருந்த படியே மக்களின் மத்தியில் பேசும் போது ஏன்,எந்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்க கூடியவர்களுக்கு மக்களை பார்த்து இந்த தைரியத்தில் தான் வந்துள்ளதாகவும், இதில் தாக்கு பிடிக்க முடியுமா என்றும் கேட்கிறார்கள்.மக்கள் இருக்கும் வரை தாக்கு பிடிக்க முடியும், என் பின்னாடி வாருங்கள் என்று அழைக்க மாட்டேன். என்னுடன் சேர்ந்து வாருங்கள் என்று மக்களை அழைப்பேன் என்றும் நல்ல தமிழகம் நாளை வேண்டும் என்றால் எல்லோரும் இறங்கி வேலை செய்யவேண்டும், நாளை நமதே நாளை நமதே என்று கூறி உரையை நிறைவு செய்து சென்றார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்
பின்னர் இன்று, விவசாயிகளை சந்தித்தார். அப்போது அத்திக்கடவு-அவினாசி நீர்பாசன திட்டம் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார்.அங்கிருந்து புறப்படும் அவர் வழி நெடுக மக்களை சந்திக்கிறார். பிற்பகலில் மாமரத்துப்பாளையம் செல்லும் கமல்ஹாசன், அங்கு மாற்று திறனாளிகளுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு ஈரோடு செல்லும் அவருக்கு கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் சந்தித்து பேசுகிறார்.
|
நாளை சுற்றுப் பயணம்
நாளை காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சியில் இருந்து கமல்ஹாசன் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். 9.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது 18 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றுகிறார்.












Click it and Unblock the Notifications