மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொள்கைகள் 5 மாதத்தில் வெளியாகும் - கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒரு சில கொள்கைகள் இன்று அறிவிக்கப்படும் என்றும் ஐந்து மாதத்திற்குள் முழுமையாகக் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி: மக்கள் நீதி மய்யத்தின் முழு கொள்கையும் ஐந்து மாதத்திற்குள் முழுமையாக அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயர் மற்றும் சின்னத்தை கமல் அறிவித்தார்.
கட்சிப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வைகை ரயிலில் பயணிகளுடன் சென்றார் கமல்ஹாசன்.

தொண்டர்களுக்கு கமல் அழைப்பு
ஊர்க்குருவிகள் நாம் ஒன்று சேர்ந்து பறந்தால் அரசியலுக்கும் ஊழலுக்கும் பிறந்த பிணம் தின்னி கழுகுகளை இல்லாமலேயே செய்து விடலாம். வாருங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் கமல்ஹாசன்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார் கமல்.

மத்திய அரசு நாடகம்
தமிழகத்தில் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால், 2016ம் ஆண்டு தீர்ப்பை போலவே இப்போதும் மத்திய நாடகம் நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. சாக்குப் போக்குகள் சுட்டிக்காட்டி இனியும் இது தாமதிக்க கூடாது.

போலி உண்ணாவிரதம்
தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ அல்லது போலியாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோ தமது இயலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு என்று கடுமையாக விமர்சித்தார் கமல்.

காவிரி பற்றி விவாதம்
மேலும் இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முக்கிய தலைப்பாக காவிரி குறித்து பேசப்படும் என்று தெரிவித்தார். காவிரியின் பிரச்சனைகள் மட்டுமில்லாமல், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கமல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கொள்கைகள்
இன்றைய கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒரு சில கொள்கைகள் அறிவிக்கப்படும் மற்றும் ஐந்து மாதத்திற்குள் முழுமையாகக் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். காவிரி நதிநீர், ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக திரைத்துறையினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் கமல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications