மக்கள் பணியாற்ற தலைவர்கள் "அணத்தியற்கு" இணங்க.. களத்தில் இறங்கிய 'நாயகன்'
களத்தில் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அணத்தியதற்கு இணங்க நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் களப்பணியைத் தொடங்கியுள்ளார்.
Recommended Video
சென்னை : டுவிட்டர் களத்தை விட்டு அரசியல் களத்திற்கு வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் நடிகர் கமல் குறித்து விமர்சித்து வந்த நிலையில் இன்று முதன்முறையாக களப்பணியில் இறங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சென்னை எண்ணூர் கழிமுகத்தை உதாசீனம் செய்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று கூறி அதன் முழுவிவரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
இதற்கு அதிமுக அமைச்சர்கள் அரசியல் களத்திற்கே வராமல் குறை சொல்லக் கூடாது என்று விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாக டுவிட்டரில் அறிவித்த கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் பிரச்னைகள் குறித்து தமிழக அரசைச் சாடி விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டிய கமல்
நீட் தேர்வு விவகாரம், டெங்குவை கட்டுப்படுத்தாத அரசுக்கு கண்டனம் என்று மக்களின் ஹாட் பிரச்னைகளுக்கு ஏற்ப தனது கண்டனத்தையும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கமல் கருத்துகளை பதிவிட்டு வந்தார். அண்மையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார்.
நிலவேம்பு வேண்டாம் என்றதால் சர்ச்சை
நிலவேம்புக் கசாயம் குறித்து சர்ச்சை எழுந்த போது, மருத்துவ ரீதியாக நிலவேம்புக் கசாயம் பற்றிய விளக்கம் கிடைக்கும் வரை அவற்றை மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தினருக்கு தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சித்த மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் நீதிமன்றத்தை கமல் மீது வழக்கு பதியுமாறு மனு தாக்கல் செய்தார்.
கமலை நெருங்கும் வழக்கு
இதனால் கமல் அவதூறு பரப்புவதாக முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கமல் மீது வழக்கு பதிவது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடக்கம் முதலே கமல் அரசியலுக்கு வருவதாகச் சொன்ன போதெல்லாம் அதற்கு டுவிட்டர் களத்தில் அரசியல் செய்யாமல் மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
அதிகாலையில் கள ஆய்வு
இந்நிலையில் எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதால் பாழடைந்த இடங்களை நடிகர் கமல்ஹாசன் இன்று அதிகாலை பார்வையிட்டுள்ளார். சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் சிலரும் அப்போது உடனிருந்துள்ளனர்.
ஒரு கை பார்த்துவிடலாம்
கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளில் வெளியாகலாம் என்று செய்திகள் பரவி வரும் நிலையில், களத்தில் முதன்முறையாக கால்தடம் பதித்துள்ளார் கமல்ஹாசன். இது அவரின் அரசியல் வருகைக்கான உறுதிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. களத்திற்கு வந்து மக்கள் பணியாற்றுங்கள் என்று கேட்டவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசியல் ஆழத்தை ஒரு கை பார்த்துவிடலாம் என்று கமல் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி தான் இது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.