விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர் காமராஜர்.. பள்ளி விழாவில் புகழாரம்
தேவேகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்காசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். புகழ்ச்சியை விரும்பாதவர். நுணுக்கமாய் பேசுபவர். பணிவு மிகுந்தவர். ரத்தின சுருக்கமாக பேசுபவர். அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர் என்று பேசினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் முத்தையன், அனுஷயா, திவ்யஸ்ரீ ,வெங்கட்ராமன் ,மகாலெட்சுமி, ஐயப்பன், கார்த்திகேயன், ராஜி, ரஞ்சித், பரத்குமார், தனலெட்சுமி ஆகியோருக்கு தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் பரிசுகளை வழங்கினார். விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications