காஞ்சி. குலுங்கியது... தொடங்கியது தேமுதிக மாநாடு.. விஜயகாந்த் பேச்சுக்காக தொண்டர்கள் காத்திருப்பு!
காஞ்சிபுரம்: பரபரபப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிக மாநில மாநாடு இன்று காஞ்சிபுரம் அருகே வேடலில் தொடங்கியுள்ளது. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறார்கள். தற்போது திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தவிர, அதிமுக தலைமையில் ஓர் அணியும், மதிமுகவின் ஒருங்கிணைப்பில் மக்கள் நலக் கூட்டணியும், பாமக தனியாகவும் களத்தில் உள்ளன.
இந்நிலையில், தேமுதிகவை தங்கள் பக்கம் சேர்த்து ஒரு வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயன்று வருகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் தங்கள் அணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை விஜயகாந்த் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேமுதிக மாநில மாநாடு காஞ்சிபுரத்தை அடுத்த வேடலில் இன்று நடைபெறுகிறது.
குலதெய்வம் கோவில்
விஜயகாந்த் எந்த காரியத்தை செய்தாலும், தனது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே செய்வார். அதன்படி கடந்த 15ம் தேதி அவரது குல தெய்வமான மதுரையில் உள்ள காங்கேயநத்தம் பகுதியில் அமைந்துள்ள 'வீர சின்னம்மாள்' கோயிலுக்கு தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் - மீனாட்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பிரேமலதா உடன் சென்ற விஜயகாந்த் மாநாட்டுக்கான அழைப்பிதழை வைத்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை செய்தார்.
தேமுதிக மாநாடு
இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிகவின் இன்றைய திருப்புமுனை மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' என்று இம் மாநாட்டுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. "துணிந்திடு, தவறுகளைக் களைந்திடு, புதிய மாற்றுத்துக்கான ஆரம்பம்' ஆகிய கோஷங்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளன.
பிரேமலதாவின் விமர்சனம்
அண்மையில் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கட்சிகளின் கூட்டணியாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்துள்ளதாகக் கூறி, அதை ஆமோதிப்பதுபோல பேட்டி அளித்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக சேர வாய்ப்பில்லை என்ற கருத்து உருவானது. எனவே, பாஜக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, தேமுதிக தலைமையில் தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
குவிந்த தொண்டர்கள்
அரசியல் திருப்பு முனை மாநாட்டில், சட்டசபை யாருடன் கூட்டணி என்று கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திசை திருப்பிய போலீஸ்
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை திசை திருப்பும் வகையில் வாகனங்களை சுத்தலில் விடுவதாக மேடையில் பேசியவர்கள் குற்றம் சாட்டினர். தேமுதிகவின் திருப்பு முனை மாநாட்டில் அலைகடலென திரண்டு வரும் மக்களை இதன் மூலம் தடுத்து விட முடியாது என்றும் தெரிவித்தனர் மேடையில் பேசியவர்கள்.
கூடுதல் சீட் வாங்க
அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் மாநாட்டை நடத்துவது, அதிக அளவிலான தொண்டர்களைக் கூட்டி, சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்களை பெறுவதற்கான பேர வலிமையை உயர்த்திக் கொள்ளும் உத்தியாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கூட்டணியை அறிவிப்பாரா
எது எப்படியோ, அரசியல் கட்சியினரின் கவனம் அனைத்தும் காஞ்சிபுரம் மாநாட்டை நோக்கி திரும்பியுள்ளது. இம் மாநாடு தேமுதிகவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா, அல்லது வழக்கமான சம்பிரதாய மாநாடாக இருக்குமா என்பது விஜயகாந்தின் அறிவிப்பில்தான் உள்ளது.