வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு ”நன்றி” - கனிமொழியின் காட்டமான ட்வீட்
சென்னை அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதற்கு காரணமான எண்ணூர் துறைமுக கழிமுகத்தை ஆக்கிரமித்துள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தை கிண்டலாக சாடியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.
சென்னை : ஒரு நாள் பெய்த மழைக்கே வெள்ளக்காடான அத்திப்பட்டு புதுநகர் பகுதியின் அவலநிலைக்கு காரணமான வள்ளூர் அனல்மின்நிலையம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி நன்றி என காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
வடசென்னைக்குட்பட்ட எண்ணூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாகினால் தண்ணீர் போக வழியில்லாமல் வடசென்னை பகுதிக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நடிகர் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. ஆரம்பமே அமர்க்களமாக இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் முட்டி அளவு தண்ணீர் உள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது தான் பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்று குறிப்பிட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சில படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமித்துள்ள வள்ளூர் அனல்மின்நிலையம், பாரத்பெட்ரோலியம், இந்துஸ்தான்பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்திற்கு நன்றி.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 31, 2017
மேலும் இந்த நிலைக்கு காரணமான எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமித்துள்ள வள்ளூர் அனல்மின்நிலையம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்திற்கு நன்றி என்று தனது டுவிட்டீல் காட்டமாகவும் சாடியுள்ளார் கனிமொழி.