கடலில் மீனவர் பிணங்கள் மிதப்பதாக தொடர்ந்து கூறுகிறார்களே.. அரசு கவனிக்கிறதா இல்லையா?
ஓகி புயலால் கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் சிலரின் உடல்கள் ஆழகடலில் மிதப்பதாக தொடர்ந்து மக்கள் கூறி வரும் நிலையில் இந்த விவகாரத்தை அரசு கவனிக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
நாகர்கோவில்: ஆழ்கடலில் இறந்த மீனவர்களின் உடல்கள் மிதப்பதாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மக்கள் கூறி வரும் நிலையில் இந்த விவகாரத்தை அரசு கவனிக்கிறதா. மக்களின் இந்த தகவல் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல்படையினர் தேடி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. கிட்டத்தட்ட 15 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து பதற்றத்திலேயே உள்ளனர் குமரி மாவட்ட மீனவ கிராம மக்கள்.
ஓகி புயலில் சிக்கி மாயமானவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கினர். அவர்களில் குமரி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இவர்களை தவிர குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் 463 பேர் என மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறி உள்ளது.
100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம்
இதனிடையே குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று இன்று வரை கரை திரும்பாமல் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை 480 என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் இது குறித்து கூறுகையில் : குமரி மாவட்டத்தில் இருந்து ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களில் 104 பேர் பலியாகி இருக்கலாம் என்று கருதுகிறோம்.
வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்புவார்கள். எனவே 23ம் தேதிக்குள்ளாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்புகின்றனரா என்பதை பார்த்தால் தான் முழுவிவரம் தெரிவும்.
பலியாகி இருக்கலாம்
எனினும் புயலில் சிக்கி கரை திரும்பிய மீனவர்களிடம் சில தகவல்களைத் திரட்டியுள்ளோம். அதன்படி பலியானவர்கள் எண்ணிக்கை நீரோடி துறையில் 37, மார்த்தாண்டம் துறை 5, வள்ளவிளை 3, இரவிபுத்தன் துறை 5, சின்னத்துறை 44, தூத்தூர் 3, பூத்துறை 4, இரயுமன்துறை 3 பேர் என மொத்தம் 104 பேர் பலியாகி இருக்கலாம் என நம்புகிறோம்.
உடல்களை மீட்க நடவடிக்கை வேண்டும்
பலியான மீனவர்களின் உடல்கள் ஆழ்கடலில் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகிறார்கள். கேரளாவில் ஆழ்கடலில் மிதக்கும் பிணங்கள் மீட்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடலில் மிதக்கும் மீனவர்களின் பிணங்களை உடனடியாக மீட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்பின் பிரதிநிதி கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டுள்ள மீனவ மக்களுக்காக அரசு இந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் தொடர் குற்றச்சாட்டு
கடலுக்கு சென்ற மீனவர்கள் அசாதாரண சூழலில் 6 நாட்கள் வரையே கடலில் தாக்குபிடிக்க முடியும் என்பது மீனவர்களின் கருத்தாக உள்ளது. அப்படி இருக்கையில் 15 நாட்கள் கடந்த நிலையில் மீனவர்களை தேடும் பணி நடைபெறுவதாக அரசு சொல்வது நம்பிக்கையளிக்கவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.
அரசின் கவனத்திற்கு செல்கிறதா
இதோடு கடந்த 4 நாட்களாக உடல்கள் ஆழ்கடலில் மிதப்பதாக தொடர்ந்து குமரி மாவட்ட மக்கள் கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் கூட இது போன்ற காட்சிகள் பரவி வருகின்றன. இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்கிறதா, இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாமலே உள்ளது.