தமிழக பெண்கள் மானபங்கம்: அத்துமீறிய கர்நாடக வனத்துறை
சேலம்: கர்நாடக வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு, சேலம் மாவட்டம் காரைக்காடு கிராமத்திற்குள் புகுந்து பெண்களை மானபங்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான காரைக்காடு கிராமம் பாலாறு அருகே உள்ளது. இந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவில் 30க்கும் மேற்பட்ட கர்நாடக வனத்துறை அதிகாரிகள் புகுந்து பெண்களை அடித்தும், மானபங்கம் செய்தும் துன்புறுத்தியதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாக்கிய வனத்துறை
மேலும், பொன்னுசாமி என்ற முதியவரை அவர்கள் அடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், அப்போது தடுக்க முயன்ற அவரது குடும்பத்தினரை கர்நாடக வனத்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

சாலைமறியல்
இதையடுத்து, காரைக்காடு கிராம மக்கள், மேட்டூர்-மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிலமணிநேரம் பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த மேட்டூர் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.

காரணம் என்ன?
அதிகாரிகளின் சமாதானத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் கர்நாடக வனத்துறையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

சோதனைச்சாவடி தேவை
தமிழக எல்லையான பாலாறு பகுதியில் தமிழகத்தின் சார்பாக சோதனை சாவடி இல்லாதது தான் கர்நாடக வனத் துறையினர் அத்துமீறுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications