முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கூண்டோடு நீக்கிய கருணாஸ்.. காரணம் என்ன?
சென்னை: நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகிகளை முழுமையாக கலைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முக்குலத்து புலிப்படை அமைப்பின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு நீக்கப்படுகிறார்கள்.
விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் கூட்டம் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இதுநாள் வரை நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தவர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டிருந்ததனர். எனவே அவர்கள் நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிர்வாகிகளை நீக்குவதற்கான சரியான காரணத்தை கருணாஸ் கூறவில்லை.
கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
கருணாசுக்கு சலுகை
தேர்தல் நடைபெறுவதற்கு சில காலம் முன்புதான் கட்சி தொடங்கிய கருணாசுக்கு, ஏனோ ஜெயலலிதா தொகுதியை ஒதுக்கியதோடு வெற்றிபெறவும் வழிவகுத்தார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த சில முக்குலத்தோர் கட்சிகளை ஜெயலலிதா கழற்றிவிட்டுவிட்டு, கருணாசுக்கு வாய்ப்பு கொடுத்தது ஆச்சரியம் அளித்தது.
சசிகலா பக்கம்தான்
கருணாஸ் தற்போது சசிகலா ஆதரவு அதிமுகவிலுள்ளார். அரசுக்கு எதிரான மற்றும் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரங்களில் எல்லாம், அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர் கருணாஸ். இதனால் அதிமுக தலைமை கருணாசிடம் பாசமும், பரிவும் காட்டி அன்போடு பார்த்துக்கொண்டு வருகிறது.
என்ன காரணம்?
இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "சமீப காலமாக திடீரென கருணாஸ் செல்வ செழிப்போடு வலம் வந்ததாக கருதி, கட்சி நிர்வாகிகள், ஏக்கப்பெருமூச்சு விட்டனர். தங்களுக்கு வசதி வாய்ப்பு கிடைக்குமா என வாய்விட்டு கேட்டனர். இதன்பிறகுதான் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விரட்டி விடப்பட்டனர்" என்றார்.