பத்மவிபூஷண் விருது.. திருவாரூரிலிருந்து போன் மூலம் ரஜினியை வாழ்த்திய கருணாநிதி
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படும் பத்மவிபூஷண் விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திருவாரூர் சுற்றுப் பயணத்திலுள்ள திமுக தலைவர் கலைஞர் ரஜினியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது தொகுதியான திருவாரூர் வந்தார். நேற்று இரவு அவர் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இரவு சன்னதி தெரு இல்லத்தில் தங்கினார். 2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். இதனால் சாதாரண விவசாயிகள், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளேன். இன்னும் ஏராளமான உதவிகள் செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஒருவன் செய்யும் செயலில் தான் தன்னை உயர்த்த முடியும்.
சுயநலம் இல்லாமல் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். பெருமை, புகழ் கிடைக்கும். மாணவர்கள் இளமை காலத்தில் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். இங்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என்னை பாராட்டினார்கள். இதனால் மகிழ்ச்சி, பூரிப்பு அடைகிறேன். நான் என்றைக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி மறக்காமல் இருப்பேன்.
கடந்த 5 ஆண்டுகளில் திருவாரூர் தொகுதியில் பள்ளி கட்டிடம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 7. கோடியே 18 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கி உள்ளேன்
என்றார் கருணாநிதி. இன்று மாலை 5 மணி அளவில் கூத்தா நல்லூரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பிறகு கொரடாச்சேரியில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.