தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலை ஒத்தி வைத்திருப்பது திமுகவுக்கு எதிரான சதி - கருணாநிதி
சென்னை: தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் சட்டசபை தேர்தலை ஒத்தி வைத்திருப்பது திமுகவுக்கு எதிரான சதி என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டும் தேர்தல் வரும் 23 ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனிடையே தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வேட்பாளர் பாஸ்கரன், பாஜக வேட்பாளர் ராமலிங்கம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் தேதி குறித்து வேட்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் தேர்தல் 3 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ஒத்தி வைத்திருப்பது திமுகவுக்கு எதிரான சதி. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் அங்கு தேர்தலை நடத்த வேண்டும். அறிவித்தப்படி உடனடியாக தேர்தல் நடத்தாவிட்டால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது என குற்றம் சாட்டிய அவர், திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அப்போது தெரிவித்தார்.