திமுகவினரின் மது ஆலைகளை மூடுங்க... அப்புறம் மதுவிலக்கை அமல்படுத்தலாம்!... டாக்டர் ராமதாஸ், அன்புமணி
சென்னை: மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் கருணாநிதிக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், திமுகவினராலும், திமுக ஆதரவு தொழிலதிபர்களாலும் நடத்தப்படும் மது ஆலைகளை மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதேபோல தமிழகத்தில் மதுவிலக்கை திமுக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,அக்கட்சியின் எம்.பி அன்புமணி ராமதாஸ் ஆகியோர், கருணாநிதியின் அறிவிப்பை நம்பி, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.
மதுவிலக்குப் பிரச்சாரம்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழத்தில் வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது மதுவிலக்கு பிரச்சாரம் முதன்மையான இடத்தை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியிருக்கிறார்.
தேர்தல் வெற்றிக்காக
இது அரசியலுக்காக, தேர்தலுக்காக, திமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்பதால் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு.
திமுகவின் பயம்
மதுவிலக்கு வேண்டும் என்று ஆரம்பம் முதல் கோரி வருகிறது பாமக. இதனால், பெண்கள் மத்தியில் பாமகவுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாமக வளர்ச்சியைப் பார்த்து பயம் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எனவேதான், மதுவிலக்கு கோரும் கட்சிகள் பட்டியலில் திமுக கடைசியாக இணைந்துள்ளது.
பாமகவிற்கு வெற்றி
இன்று தமிழகத்தில் 4 வயது குழந்தைகூட மது குடிக்கிறது. இந்த அவலத்துக்கு காரணம் திமுக, அதிமுக கட்சிகளே. மதுவிலக்கு வேண்டுமென்று ஒட்டுமொத்த பெண்களும் விரும்புகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் இந்த அறிவிப்பும் பாமகவுக்கு கிடைத்த வெற்றியே என்று அன்புமணி கூறியுள்ளார்.
பாவமன்னிப்பு
இதேபோல டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே என காதில் விழுந்தன. காரணம் 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும்.
ரத்து செய்த கருணாநிதி
மதுவிலக்கின் தேவை குறித்து கருணாநிதி இப்போது பேசும்போது, 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு செய்தது, அதையறிந்து துடித்து போன ராஜாஜி கொட்டும் மழையில் குடைபிடித்து வந்து கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது, ஆனால், அதை ஏற்காத கருணாநிதி, "ராஜாஜி ஒரு பரிந்துரைக்காகத் தான் என்னை சந்தித்தார்" என்று கூறி அவரை எள்ளி நகையாடிவிட்டு மதுவிலக்கை ரத்து செய்தது உள்ளிட்டவை என் நினைவுக்கு வந்து செல்கின்றன.
கருணாநிதிதான் காரணம்
மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த பாவம் கருணாநிதியையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
நம்பமாட்டார்கள்
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருணாநிதியின் அறிவிப்பை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
23 ஆண்டுகள்
1948ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்து மதுவிலக்கை, 1971ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான் இன்றைய அவல நிலைக்கு காரணம்.
மதுபான ஆலைகளுக்கு அனுமதி
சசிகலா உறவினர்களால் நடத்தப்படும் கோல்டன் மிடாஸ் தவிர 30 ஆண்டுகளில் புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற நிலையில், அதை உடைத்து தி.மு.க.வைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் கருணாநிதி கதை வசனத்தில் உளியின் ஓசை திரைப்படம் தயாரித்தவர், கலைஞர் தொலைக்காட்சி தொடங்க உதவி செய்தவர் உள்ளிட்ட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை அமைக்க அனுமதி அளித்து அடுத்த பாவத்தையும் செய்தவர் தான் கருணாநிதி.
திமுகவினரின் மது ஆலைகள்
மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் கருணாநிதிக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், திமுகவினராலும், திமுக ஆதரவு தொழிலதிபர்களாலும் நடத்தப்படும் மது ஆலைகளை மூடிவிட்டு, மதுவிலக்கு குறித்த வாக்குறுதியை அளிக்க வேண்டும்.
கொடிய பாவம்
அப்போது கூட மக்கள் நம்புவார்களா என்பது ஐயமே. ஒருவேளை உண்மையாகவே தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய கருணாநிதி விரும்பினாலும் கூட அதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் செய்த பாவம் அவ்வளவு கொடியது என்று சாடியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.